தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோரூராக நடைபெற்று வருகிறது. கழுதை பாலில் மருத்துவக்குணம் இருப்பதாக பொது மக்களுக்கு குழந்தைகளுக்கு ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். ஒரு சங்கு பால் ரூ 70க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.5000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




கழுதை பால் குடிப்பதால் இருமல், சளித்தொல்லை நீங்கி ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும், மேலும் மருத்துவ குணம் கொண்டது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கிராமங்களில் கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோரூராக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி ஜோதி நகர், ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விருத்தச்சலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் 10 கழுதைகளை வைத்து கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சங்கு கழுதை பால் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் கழுதை பால் ரூ5000க்கும் விற்பனை செய்யபடுகிறது. மேலும் கழுதை முடியினால் செய்யப்பட்ட தாயத்தும் 70ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது தவிர கழுதையிடம் மூச்சு பிடிக்கவும் 70 ரூபாய் வசூல் செய்கின்றனர். குழந்தைகள் உடலுக்கு நல்லது என்று கூறி பொது மக்கள் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி கொடுத்து வருகின்றனர். 




இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, கழுதைப்பால் கொடுப்பது சரியல்ல, சூடு செய்யாத எந்த பாலிலும் நோய் கிருமிகள் இருக்கும், தாய்ப்பால் மட்டுமே விதிவிலக்கு எனக்கூறும் மருத்துவர்கள், கழுதைப்பால் ஜீரணமாக அதிக நேரமாகும், அதே நேரத்தில் மனித செல்லுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்கின்றனர். மேலும் இதை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்கின்றனர். மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் பலதரப்பட்ட கருதப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதிலும் , கழுதைப்பால் மீதான ஈர்ப்பு கிராமப்புறங்களில் இன்றும் தொடர்கிறது.




கழுதைப் பாலில் உள்ள ஒப்பனை பயன்கள் காரணமாக பரோவா கிளியோபாட்ரா அவரது சருமத்தின் மென்மையை பராமரிக்க கழுதை பாலில் குளித்தார் என்று கூறப்படுகிறது. இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த கழுதை பால் அதிகமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாட்டுப் பாலை விட இதில் குறைந்த pH உள்ளடக்கம் உள்ளது. இது நமது சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது எனவும் கூறப்படுகிறது.