தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி நாசரேத் சாலைக்கு நடுவே காட்டுப்பகுதியில் கடந்த 10 தினங்களாக விலை அதிகமான கார்கள் அவ்வப்போது வந்து சென்றுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் கார்கள் வந்து சென்ற இடம் இரவோடு இரவாக தகரம் அமைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியா, அமெரிக்கா நாட்டின் கொடிகள் நடப்பட்டிருந்தது. அந்த இடத்தின் அருகே வாகனம் இறங்கும் வகையில் தற்காலிக பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. தார்ச்சாலையும் அமைக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில் அப்பகுதியில் ஹெலிகாப்டர் வந்து தரையிறங்கியது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போடப்பட்டு இருந்த சாமியானா பகுதியில் இருந்து பாதுகாவலர்கள் புடைசூழ சென்ற காரில் இருந்தவர்கள் ஹெலிகாப்டரில் ஏறி சென்றனர். இது குறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. அதனடிப்படையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நாக்பூரை தலைமையிடமாக கொண்ட விபிவிவி இந்தியா கட்டுமான நிறுவனத்தினரும் கார் உதிரிபாக தொழிற்சாலை அதிகாரிகளும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில் அந்த பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.




இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் எந்தவித அரசு அனுமதி இன்றி மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இன்றி அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் வந்து தரை இறங்கியது, அந்தப் பகுதியில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தது, மேலும் எந்தவித அரசு அனுமதியும் இன்றி அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரின் தனிப்பட்ட புகைப்படத்தை அந்த விளம்பர பேனரில் வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் புகாரை பெற்றுக் கொண்ட சாத்தான்குளம் காவல்துறையினர் அந்த புகார் மனு மீது புகாரை பதிவு செய்து சி.எஸ்.ஆர் போட்டு வழங்கியதாக கூறப்படுகிறது.




மேலும் சாத்தான்குளம் அருகே நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று மர்மமான முறையில் வந்து தரையிறங்கி சென்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இது தொடர்பாக வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.