தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் விளங்குகிறது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் ஊர்களில் ஒன்றாக குலசேகரப்பட்டிணமும் விளங்குகிறது. 






                                     

 

இந்தியாவின் சிறப்பு மிக்க திருவிழாக்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வேடங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்ற கோரியும் நிறைவேறிய வேண்டுதல்களுக்காகவும் கிருஷ்ணன், முருகன், விநாயகர், சிவன், அஸ்டகாளி முதல் போலீஸ் வேடம், பிச்சைக்காரர் வேடம், ராஜா ராணி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து கிராமம் கிராமமாக சென்று யாசகம் பெற்று காணிக்கை செலுத்துவது வழக்கம். வேடம் அணியும் பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து குலசேகரன்பட்டிணம்  முத்தாரம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கமாக பக்தர்களால் பின்பற்றபட்டு வருகிறது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள்தோறும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.


                                    

 

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விழாவில் பக்தர்கள், தசரா குழுவினர் பங்கேற்க மாவட்ட நிர்வாகம்,கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் விழாவின் 8, 9, 10, 15,16,17 ஆகிய தேதிகளில் பக்தர்கள் முழுமையாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், மற்ற விழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கட்டுபாடுகளை தளர்த்தி புதிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்ட தமிழக அரசு, வழிபாட்டுத்தளங்களில் வாரத்தில் 7 நாட்களும் வழிபடுவதற்கான அனுமதியை அளித்துள்ளது. 

                                  

 

தசரா பண்டியையின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு மேல் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை சம்ஹாரம் செய்கிறார். நாளை காலை 3 மணிக்கு மேல் உற்சவமூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், அபிஷேக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு மண்டபத்தில் இருந்து அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் ஆகியவை நடைபெறுகின்றன. வேடமணிந்த தசரா பக்தர்கள், தசரா குழுவினர் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.