நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11 ஆம் தேதி நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டை சமந்தன் பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கடல் காற்று கடல் சீற்றம் மழையை பொருட்படுத்தாமல் கோடியக்கரை தென்கிழக்கே கடலில் வலை விரித்து மீனுக்காக காத்திருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படை நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் படகில் இருந்த 23 மீனவர்களை கைது செய்தனர். 

 



 

இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து கைது செய்ததாக இலங்கை  கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இன்று அதிகாலை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனைக்கு பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர். கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பெரும் தொற்று காரணமாக சில மாதங்கள் கடலுக்குச் செல்லாமல் வருமானம் இருந்த நிலையில் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மீன்களை வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வாங்க வராத காரணத்தால் உள்ளுர் சந்தையிலேயே குறைந்த விலைக்கு விற்றது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இவர்களோடு வாழ்வாதாரம் பாதி தெரிந்த அவர்களுக்கு ஊரடங்கு தளர்வு காரணமாக சற்று நிம்மதி அடைந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 



 

இந்த நிலையில் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, இலங்கை கடற் கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்குவது, மீனவர்களை வெட்டுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது இரண்டு படகு மற்றும் 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடல் பரப்பில் அச்சமின்றி மீன்பிடித் தொழில் செய்ய மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.