தூத்துக்குடியில் துறைமுகம் மற்றும் அதைச்சார்ந்த ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்களில் அதிக தொழிலாளர்களை கொண்ட நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இந்த தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற வசதியாக இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.                                                                               
  



 

இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 1997 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டது.

                             

 

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போதைய மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் கொடிக்குனில் சுரேஷ் கலந்து கொண்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட இடமும் முள்செடிகள் வளர்ந்து புதர் காடாக மாறியது. 


                                       

 

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமையவுள்ள இடத்தை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 120 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதி 1997 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

                               
    

இந்நிலையில் தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை தொடங்க துவங்க புதிதாக பொறுப்பேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் குபேந்தர் யாதவிடம் கோரிக்கை அளித்தோம். அவரும் பணிகள் தொடங்குவதற்கு அனுமதி தந்துள்ளார்கள். எனவே, தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்றார்.