தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று பரந்து விரிந்து காணப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமாள தொல்லியல் பொருட்கள் கிடப்பதாகவும், அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இதனையடுத்து கடந்த 2019 முதல் தொடர்ந்து மூன்று கட்டங்களாக மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது.




குழந்தைகள் விளையாடும் வட்ட சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல் நூற்கப் பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், காப்பர் குழாய், சீன பானை ஓடுகள், வாள், கத்தி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. வாரங்காடு திரட்டில் சுடாத செங்கல்லால் அமைக்கப்பட்ட கட்டுமானம், பராக்கிரமபாண்டி திரட்டில் செங்கல்லால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என பல முக்கியத்துவம் வாய்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் கிடைத்தன.


குறிப்பாக முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பானைகள், பானை ஓடுகள், வெளிநாட்டு பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த நெல்மணியின் வயது 3200 ஆண்டுகள் பழமையானது என கடந்த வருடம் 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது அனைவரையும் சிவகளை பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.




இதற்கிடையில் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2 கட்டங்களாக நடந்த அகழாய்வு பணியில் தோண்டப்பட்ட குழியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் அதே குழியில் தான் உள்ளது. குழிகளும் மூடப்படவில்லை. இதனால் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான சாத்தயக்கூறுகள் இருந்ததாக கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழியின் மேல் பகுதியில் முதல் கட்டமாக 23 லட்சம் மதிப்பில் தகரத்தால் ஆன ஷெட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.




இந்த பகுதியில் 7க்கு 13 மீட்டர், 7 க்கு 11 மீட்டர் என இரண்டு இரங்களில் ஷெட் அமைக்கப்பட உள்ளது. மேலும் பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக 10க்கு 6 மீட்டர் அளவில் ஒரு ஷெட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதியில் நிறைவு பெறும் என்று கூறப்பபடுகிறது. தற்போது வரை சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவிக்காத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.