உலகில் தாய்ப்பாலுக்கு நிகரான ஊட்டச்சத்து வேறு எதிலும் கிடைக்காது என்று கூறுவர். மேலும் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசும்பாலையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தாய்ப்பாலில் இருக்கிற சத்துகளை காட்டிலும் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்த பாலை பல விலங்குகள் உற்பத்தி செய்கின்றன. அப்படிப்பட்ட விலங்குகளில் ஒன்று கழுதை. அதிக பாரங்களை சுமக்க உதவும் கழுதை பாலின் முக்கியத்துவம் குறித்தும் அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் சித்த மருத்துவத்திலும் குறிப்பிடப்பட்டு இருப்பதை காணலாம்,




கழுதை என்ற விலங்கு  மனிதனுக்கு உதவியாக இருந்தாலும்,  அதனை ஒரு பொருட்டாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. அந்த காலங்களில் துணிகள் துவைக்கும் தொழில் செய்து வந்தவர்களுக்கு உதவியாக கழுதை இருந்து வந்தது. சுமை தூக்கவும், நீண்ட தூரங்களுக்கு கொண்டு செல்லவும் கழுதை பயன்பட்டது.  தாய்ப்பாலுக்கு இணையாக கருதப்படும் கழுதைப் பாலில் கால்சியமும், பாஸ்பரசும் நிறைந்துள்ளது. தாய்ப்பாலை விட எளிதில் செரிமானம் ஆகும் வகையில் கழுதைப் பால் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விட்டமின் ஏ , பி 1, பி 2, சி, ஈ ஆகியவை உள்ளது.





மருத்துவ குணங்கள் நிறைந்த கழுதைப்பால் புற்று நோய் மருந்துகளிலும் ஒரு விஷயமாக விளங்குவதாக மேலை நாட்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதே போல இளமையான தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும், சரும அழகையும் கூட்டும் காரணியாக விளங்குவதாக கூறுவதுண்டு. அதே போல சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கல்லீரல் குறைபாடுகளை நீக்கவும் கழுதைபால் பயன்படுவதாக கூறப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணமிக்க விலங்கான கழுதை கடந்த 10 ஆண்டுகளில் 71 சதவீத  அழிந்து விட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.  இது ஒருபுறம் இருக்க கழுதை பாலின் மகத்துவத்தை மக்கள் உணர தொடங்கி உள்ளனர்.  குறிப்பாக கழுதையினத்தை அழிவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும், கழுதை பால் உள்ளிட்டவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் நோக்கிலும்   நெல்லையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் புது முயற்சியை முன்னெடுத்துள்ளார்.





நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே துலுக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் பாபு தனது நண்பர்களுடன் இணைந்து 10 ஏக்கர்  நிலப்பரப்பில் கழுதை பண்ணை ஒன்றை துவக்கியுள்ளார்.  தமிழகத்தில் முதன்முறையாக துவக்கப்பட்டுள்ள வணிக ரீதியிலான  கழுதை பண்ணை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. கழுதை வளர்ப்பை நவீனப்படுத்தியதோடு அதில் கழுதைகள் வளர்ப்பிற்கான கொட்டகை, பால் கறக்குமிடம், குட்டிகளுக்கு பால் கொடுக்குமிடம், இதோடு வாத்து வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகியவையும் செய்து வருகிறார்.   தமிழகத்தின் முதல் கழுதை பண்ணையை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.  




இது குறித்து கழுதை பண்ணையை சேர்ந்த நிர்வாகி கிரி செளந்தர் கூறுகையில்,  ”அழிவின் விளிம்பில் இருந்து கழுதை இனத்தை காக்கும் வகையிலும் கழுதை பாலின் மகத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும்  தமிழகத்தில் முதன்முறையாக கழுதை பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 100 கழுதைகள் எங்களிடம் உள்ள நிலையில் விரைவில் ஆயிரம் கழுதைகள் கொண்ட பண்ணையாக மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். கழுதைப் பால் மூலம் பல்வேறு அழகு சாதன பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. தினமும் ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில் 400 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.


தேவை அதிகமாக உள்ள நிலையில் ஒரு கழுதை மூலம் நாள் ஒன்றுக்கு 500 மி.லிட்டர்  முதல் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பால் மட்டுமே கிடைக்கும். மேலும் தேவை அதிகமாக இருப்பதால் இந்த தொழிலுக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர்,  ஒரு லிட்டர் பாலின் விலை 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனையாகிறது. 50 மி.லிட்டர்  500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.




மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறும்பொழுது, ”அழிவு நிலையில் உள்ள இந்த கழுதை இனத்தை பாதுகாத்திட வேண்டும். இந்தியாவில் தற்போது  1,40,000 கழுதைகளும், தமிழகத்தில் 1428 கழுதைகள் மட்டுமே  உள்ளது. கழுதை பாலின் மூலம் பல்வேறு மருத்துவ குணம் உள்ளது. கழுதைப்பால் தாய்ப்பாலுக்கு நிகராக செயல்படுவதோடு, மனித எச்சிலில் உள்ள லைசைசைன் என்ற ரசாயனம் உள்ளதால் இது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது” என்று தெரிவித்தார்.


மேலும் தாய்ப்பாலுக்கு இணையான சக்தி கொண்ட இந்த கழுதைப்பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை 7000 விற்கப்படுவதால், இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என்று  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.


அந்த கால கட்டங்களில் சரியாக படிக்காதவர்களை  நீ கழுதை மேய்க்க தான் லாயக்கு என்று சுட்டிக்காட்டுவர், ஆனால் கழுதை வளர்ப்பு மூலம் ஒருவர் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று நிரூபித்து காட்டியதோடு வெற்றி பாதையை நோக்கி பயணிக்கும் பட்டதாரி இளைஞர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை