தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.




இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 4-ஆம் ஆண்டு நினைவு தினம் 22-05-2022 அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளர்களில் 30 (2) காவல்துறை சட்டம்  நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை. 




தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம், செய்துங்கநல்லூர், பெரியதாழை, சங்கரன்குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியாபட்டி மற்றும் சவலாப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விளக்கினார். பாதுகாப்பு பணியில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு  ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 127 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் 22.05.2022 அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்பிரவேஷ் குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் திருநெல்வேலி சரவணன், தென்காசி கிருஷ்ணராஜ், தேனி டோங்கரே பிரவிண் உமேஷ், ராமநாதபுரம் கார்த்திக் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு ஜெயக்குமார் ஆகியோர்களும், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கோபி, இளங்கோவன், திருநெல்வேலி ராஜூ, மாரிராஜன், தென்காசி கணேஷ் தங்கராஜ், கன்னியாகுமரி வேல்முருகன், ராஜேந்திரன், திண்டுக்கல் லாவண்யா, ராமநாதபுரம் கார்த்திக் உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட கவல்துறையினர் கலந்து கொண்டனர்.




ஸ்டெர்லைட் சம்பவம் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22.05.2022 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள, 2003 விதி 12 துணை விதி (1) இன் படி பட்டியலில் கண்ட 54 மதுபான கடைகளும் / பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.