நெல்லை மாநகரையடுத்த கேடிசி நகர் அருகே உள்ளது கீழநத்தம் ஊராட்சி. இங்குள்ள மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை. இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் அரசம்மாள் வயது (70). இவர் மகனின் வீட்டிலேயே தனியாக ஓர் அறையில் வசித்து வந்ததாக தெரிகிறது.  இந்த நிலையில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு வந்த அழைப்பில் கேடிசி நகர் அருகே மங்கம்மாள் சாலை பகுதியில் சிலர் தீயில் சிக்கிக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர் தீயணைப்புத்துறையினர். அப்போது வீட்டின் ஏணிப்படிக்கு கீழே விறகுகளில் தீ பற்றி எரிந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.  அப்போது விறகுகளின் நடுவே கருகிய நிலையில் உடல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.




தீயில் சிக்கி கருகிய நிலையில் கிடந்த உடலானது மூதாட்டி அரசம்மாள் என்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.  குறிப்பாக மகன் அண்ணாமலையிடம் போலீசார் விசாரித்ததில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


ஆனால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட மூதாட்டி விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றது எவ்வாறு? அலறல் சத்தம் எதுவும் அருகில் இருந்தவர்களுக்கு கேட்காத சூழலில் மூதாட்டி தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு சந்தேகங்கள்  காவல்துறைக்கு எழும் சூழலில் வேறு யாரேனும் மூதாட்டியை கொலை செய்து உடலை விறகுகள் இருந்த பகுதியில் போட்டு எரித்துவிட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்து வருகின்றனர்.




இதனிடையே ஏற்கனவே மாமியார்- மருமகள் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததும் இதன் காரணமாக  ஒரே வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் மூதாட்டி வசித்து வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வரும் சூழலில் தற்போது உயிரிழந்த மூதாட்டியின் மரணம் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் 174 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீயில் கருகிய மூதாட்டியின் உடல் பாகங்களை எடுத்து சென்று ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண