தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.




தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 2,887 எல்இடி தெரு விளக்குகள் ரூ.5.54 கோடியில் அமைத்தல், 6 இடங்களில் ரூ.1.62 கோடியில் அதிநவீன சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் அமைத்தல், ரூ.14.34 கோடியில் தார் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், மழைநீர் வடிகால் பணிகள், சிறுபாலம் அமைக்கும் பணிகள், குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், ரோச் பூங்காவில் உள்ள 5 தற்காலிக கடைகளை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்குவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்னைகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். இவைகளுக்கு பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பணிகள் நல்ல முறையில் முழுமையாக நடைபெற மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். 20 அடி, 40 அடி சாலைகளில் எண்ட் டூ எண்ட் முழுமையாக புதிய சாலைகள் அமைக்கப்படும். அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அகற்றப்படும்.




எதிர்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. இதில் பாராபட்சம் ஏதும் கிடையாது. மாநகராட்சி பகுதியில் 151 பூங்காக்கள் இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 40 பூங்காக்கள் தான் செயல்பாட்டில் உள்ளன. எனவே, மக்கள் விரும்பும் இடங்களில் வசதிக்கு ஏற்ப பூங்கா வசதிகள் செய்து கொடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் முடிவடையும். பாதாள சாக்கடை திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றார். கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.