தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பணி மூப்பு அடிப்படையில் தனக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி தலைவரின் உறவினரும், முன்னாள் பேரூராட்சித் தலைவியுமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.




அப்போது பதவி உயர்வுக்கு சுடலைமாடனிடம் பேரூராட்சி முன்னால் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால் அவரை ஜாதி பெயரை சொல்லி திட்டி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த 17-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்




இந்த சம்பவம் உடன்குடி பேரூராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுடலைமாடன் தற்கொலைக்கு காரணமான பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றும் 24 தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இதையடுத்து அவர்களை போலீஸார் அங்கிருந்து அகற்றி பேரூராட்சி மண்டபத்தில் தங்க வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கண்ணன், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் ரகுராஜன் ஆகியோர் அங்கு வந்து தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.




முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் சுடலைமாடனை நேரில் பார்த்தார். மேலும் அங்கு இருந்த, சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள், மகள் உமாமகேசுவரி ஆகியோரிடமும் விசாரித்தார். அதே போன்று சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார் ஆகியோரிடமும் விசாரித்தார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ம.வெங்கடேசன், உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன் என்பவரை சாதியை கூறி இழிவுபடுத்தியதாலும், பதவி உயர்வு வழங்க மறுத்ததாலும், விஷம் குடித்து உள்ளார்.  இது தொடர்பாக முன்னாள் பேரூராட்சி தலைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உதவி ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து சென்னைக்கு சென்று தேடி வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி முன்னாள் தலைவியை கைது செய்ய வேண்டும். மேலும் உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தற்போதைய பேரூராட்சி தலைவியின் அனுமதி இல்லாமல் அவரது மாமியார் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிட முடியாது. எனவே, தற்போதைய பேரூராட்சி தலைவி மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது பதவியை ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று ஆணையம் சார்பில் வலியுறுத்துகிறோம்.


இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தூய்மை பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி இறக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதற்கு 2 காரணங்கள் உள்ளன. அந்த பணியில் ஈடுபடும் பணியாளர் பணம் கிடைக்கும் என்பதற்காக பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டும். மலக்குழியில் ஒரு பணியாளர் இறந்தால், அந்த வழக்கில் மாநகராட்சி ஆணையாளரையும் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய உள்ளோம். இது போன்ற இறப்பை குறைப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்திரங்கள் மூலம் மலக்குழியை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற தற்கொலை முயற்சிகள் நடைபெறுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களுக்கு புகார்களை தைரியமாக தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர் வாரியம் செயல்படாமல் உள்ளது. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநில அளவிலான ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். நாடு முழுவதும் 11 மாநிலங்களில்தான் ஆணையம் உள்ளது. ஆகையால் தமிழகத்தில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளேன் என்றார்.


இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுடலைமாடன் இன்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷாவை கைது செய்யக்கோரி உடன்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் ஆத்தூர் சாயர்புரம் சாத்தான்குளம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)