நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பக்திநாதபுரம். இப்பகுதியில் வசித்து வருபவர் உஷா தேவி (வயது 62), இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். உஷா தேவி மட்டும் வடக்கன் குளம் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் இன்று காலை முதல் உஷாதேவி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரின் நடமாட்டம் இல்லாததை அறிந்து உஷாதேவி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது உஷா தேவி இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து அவரது மகன்களுக்கும், மகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.


பின்னர் மகள் வந்து பார்த்த போது உஷா தேவி கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது பவுன் தங்கச் செயின் மற்றும் இரண்டு சவரன் வளையல் ஆகியவற்றையும் காணாமல் போனது தெரியவந்தது.. மேலும் உஷா தேவியின் உடம்பு, கழுத்து பகுதியில் சின்ன சின்ன காயம் இருப்பதும்  தெரிய வந்தது. இதனை கண்டு சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து ராதாபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பிரிட்டோ மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உஷாதேவி வீட்டில் தனியாக  இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் யாரோ வீட்டினுள் புகுந்து அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தங்க நகைகளை திருடி சென்றிருக்கலாம் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து  வழக்குபதிவு செய்த ராதாபுரம் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண