வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் நெல்லை மாவட்டத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக தாமிரபரணி நதியில் அமைந்துள்ள வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டு இருக்கு 5300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் சூழலில் அணையின் பாதுகாப்பு கருதி உபரியாக வரும் நீர் அனைத்தையும் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து காலை 5340 கன அடி நீரை உபரியாக தாமிரபரணி ஆற்றில் வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து திறந்து விட்டுள்ளனர். அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் கால்நடைகளை திறந்து விடவும் வேண்டாம் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அணை கட்டிற்கு வரும் நீரின் வரத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு உள்ளிட்டவைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.


மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிறப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டத்தின் குடிநீருக்கு விவசாயத்திற்கும் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நெல்லையில் முக்கிய அணையாக கருதப்படும் காரையாறு அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் மணிமுத்தாறு அணைக்கு மேலே அமைந்துள்ள ஊத்து எஸ்டேட் பகுதியில் 80மிமீ மழையும், நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 72மிமீ, காக்காச்சி எஸ்டேட் பகுதியில் 65மிமீ, மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் 60மிமீ, பாபநாசம் பகுதியில் 70மிமீ மழையும் பதிவாக்கியுள்ளது.


இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணையாக கருதப்படும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 3 அடி உயர்ந்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை தற்போது 113 அடி எட்டியுள்ளது. மேலும் வினாடிக்கு 2500 கன அடி நீர் அணைக்கு வருவதால் விரைவில் காரையார் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிபார்க்கப்படுகிறது.