கேரள மாநிலம் கொச்சி கடல் பரப்பில் கடந்த வாரம் கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ஒரு கப்பலை மடக்கி சோதனை செய்தனர். அந்த கப்பலில் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 525 கிலோ கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கப்பலில் இருந்து இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு போதை பொருளை வினியோகம் செய்ய இருந்தது தெரியவந்தது. அதே போன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலில் இருந்து, சிறிய படகுகள், கப்பல் மூலம் போதை பொருளை கடத்தி சென்று இருப்பதாகவும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.




இதனை தொடர்ந்து நடுக்கடலில் இருந்து ஏதேனும் படகுகளில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு உள்ளதா, அந்த கப்பல் கண்டறியப்பட்ட பகுதிகளில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் சிறிய படகுகள் சென்று உள்ளதா என்பது குறித்தும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி குஜராத்தை சேர்ந்த ஒரு பழைய மீன்பிடி படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படகுக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று போதை பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.




இதைத் தொடர்ந்து அந்த விசைப்படகை அதிகாரிகள் படகு கண்காணிப்பு தொழில்நுட்பம் (வெசல் டிராக்கிங் சிஸ்டம்) மூலம் கண்காணித்தனர். அந்த படகு குஜராத்தில் இருந்து 6 பேருடன் புறப்பட்டு உள்ளது. அந்த படகு கொச்சியை கடந்த கன்னியாகுமரி நோக்கி சென்றது. இந்த படகு இலங்கைக்கு செல்ல முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடனடியாக சென்னையை சேர்ந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் அந்த படகை கண்காணிப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த படகை கண்காணித்தனர். அப்போது கொச்சியை கடந்த வந்த போது, அந்த படகில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பழுதான படகை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு என்பதை காட்டி கொள்ளாமல் படகை சரி செய்து கொடுத்து உள்ளனர். தொடர்ந்து அவர்களது படகை சரி செய்யும் வகையில் தருவைகுளம் மீன்பிடி இறங்குத்தளம் பகுதிக்கு வருமாறு தெரிவித்ததை தொடர்ந்து அந்த படகில் இருந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரை பகுதிக்கு வந்து உள்ளனர்.




இதனை நம்பிய 6 பேரும் படகுடன் தருவைகுளம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு தரைதட்டியது. இதனால் நீர்மட்டம் உயர்ந்த பிறகு படகை கரைக்கு கொண்டு வர போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்களா? ஏன் குஜராத்தில் இருந்து இங்கு வந்தனர்? இடையில் சரக்குகள் கைமாற்றம் செய்ய இருந்தார்களா என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்வதற்காக பிடிப்பட்ட 6 பேரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.