நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடிங்கியது சம்பந்தமாக புகார்கள் வந்ததின் பேரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக  சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருடைய இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின் படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா அவர்களை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சுபாஷ் என்பவரின் புகாரின் பேரில் பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா அவர்களின் இரண்டு கட்ட விசாரணை அறிக்கையின் படி இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலக ராணி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக புகார் கொடுத்த சுபாஷ் மற்றும் பலரிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேலும் சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரும் நியமிக்கப்பட்டார்.


இந்த நிலையில் சுபாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 03/2023 என முதல் வழக்கும், அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 04/2023 என இரண்டாவது வழக்கும், வேத நாராயணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 05/2023 என 3 வது வழக்கும்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மற்றும் சில காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்துள்ளனர். அதன்படி, அயன் சிங்கம்பட்டி ஊரில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகாரின் பேரில் கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யா பல் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டதாக சூர்யா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங், ஆய்வாளர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோரது பெயர்களை சேர்த்து உள்ளனர்.


இதற்கு முன்னதாக சுபாஷ், அருண்குமார், வேத நாராயணன் என மூவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்வீர்சிங் மற்றும் சில காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 4 வது குற்ற வழக்காக (4th Fir ) சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளது வழக்கு விசாரணையில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக பல் பிடுங்கிய புகாரில் இந்த சூர்யா தான் முதலில் பல்வீர்சிங்க்கு ஆதரவாக சேரன்மகாதேவிசார் ஆட்சியர் அலுவலகத்தில் பிறழ் சாட்சியம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் நடந்த உயர் மட்ட குழு அதிகாரி அமுதா IAS அவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் அதை தொடர்ந்து எழுத்து பூர்வமாகவும் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் காவலர்கள் முதலில் தன்னை மிரட்டியது குறித்தும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தான் தற்போது சூர்யா புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.