கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்குளத்தை சேர்ந்தவர் ஸ்டான்லி குமார். வயது 50.  இவர் 19 வருடங்களாக தென்காசி மாவட்டத்தில் வசித்து வருகிறார். குறிப்பாக கடந்த இரண்டாயிரத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் பகுதியில் இயங்கி வரும்  பிலிவர்ஸ் சர்ச் இந்தியா என்ற கிறிஸ்தவ நிறுவனத்தில் மத போதகராக பணியில் அமர்த்தபட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அந்நிறுவனம் மீது பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 


பிலிவர்ஸ் சர்ச் நிறுவனம் பணியாளர்களின் குடும்ப போட்டோவை வெளிநாடுகளுக்கு அனுப்பி தங்கள் அறக்கட்டளை மூலம் நிதி பெற்று பணியாளர்களுக்கு மாதம்தோறும் அவர்களது தனிப்பட்ட வங்கி கணக்கில் மாதச் சம்பளம் கொடுத்து வந்தது. மேலும் எனக்கு வங்கி கணக்கு மூலம் சம்பளம் வந்தது. அதோடு சம்பளத்துடன் பிஎஃப் தொகையும் பிடித்தம் செய்து வந்தது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் எனது சம்மதம் இன்றி அவரின் ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி 100 ரூபாய் முத்திரை பத்திரத்தில் அவர்களே வாசகங்களை டைப் செய்து கையொப்பம் பெற்று முறைகேட்டில் ஈடுபட முயற்சித்தனர். எனது சம்மதம் இன்றி பிலிவர்ஸ் சர்ச் இந்தியா நிறுவனத்தில் தான் சம்பளம் இன்றி தன்னார்வமாக பணியாற்றுகிறதாக பொய்யான வாக்குறுதி ஆவணமும் தயாரிக்க முயன்றனர். அதேபோன்று தான் சர்ச் நிறுவனத்திற்கு கடன் பெற்றதாகவும், வேலைக்கு சம்பளம் தர முடியாது, அது சேவை என்ற வாசகத்தின் மூலமும் கூலி அல்லது சம்பளம் ஊதியம் கேட்டு உரிமை கோர தகுதியற்றவர் எனவும் ஆவணம் செய்து கையொப்பம் கேட்டனர். அதற்கு மறுத்ததால் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பழி வாங்கும் நடவடிக்கையில் பிலிவர்ஸ் சர்ச் இந்தியா சபை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 




மேலும் கூலிப்படையினரை ஏவி தனது உயிருக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். அதில் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டுள்ளதோடு பிலிவர் சர்ச் இந்தியா சபை தமிழகத்தில் 600க்கும் மேல் இயங்கி வருவதாகவும், இதன் தலைமையிடம் கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வருவதாகவும், சபைக்கு வரும் பொதுமக்களின் ஆதார் எண்ணை கேட்டு பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முற்படுவதாகவும் அவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பண பலன்களை வழங்க மாநில சிறுபான்மை  நலத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பாவூர்சத்திரம் அருகே கிறிஸ்தவ மத போதகர் தான் பணிபுரியும் பிலிவர் சர்ச் இந்தியா பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.