கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தொடர் பலி மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக மீன்வளத்துறை சார்பில் மீன் பிடி துறைமுகம் மூடப்பட்டது. துறைமுகம் மூடியதால் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு தொழில் செய்ய மாற்று இடம் வழங்க கோரி மீனவ அமைப்புகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் அரவிந்திடம் கோரிக்கை விடுத்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் 2019 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. துறைமுகம் கட்டும் பொழுதே கட்டுமான பணிகள் சரியில்லை குளறுபடியாக உள்ளதாக மீனவர்கள் கூறியும் கூட அன்றைய அரசு அதில் செவி சாய்க்காமல் வலுக்கட்டாயமாக கட்டி முடித்து திறப்பு விழா செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை கட்டுமான குளறுபடி காரணமாக துறைமுகம் நுழைவாயிலில் வரும் பொழுது மணல் திட்டில் சிக்கி படகுகள் தூக்கி வீசப்பட்டு இதுவரை 28 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசு மீன்பிடி துறைமுகம் சீரமைப்பிற்காக 253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் மீனவர்கள் தரப்பில் இது வெறும் அறிவிப்பாகி விடும் எனவே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை சீரமைப்பு பணிகள் செய்யப்படும் என அறிவித்தும் ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை பணிகள் தொடங்குவதற்கான முகாந்திரம் ஏதும் தெரியவில்லை என்று மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.16 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

 

இந்த நிலையில் மீனவர்கள் பலி மற்றும் மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக தேங்காய்ப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் , மீன் வளத்துறை சார்பில் மூடப்பட்டது. இதனால் இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு மாற்று இடம் தொழில் செய்ய அரசு தரப்பில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை , இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.



 

இந்நிலையில் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை மீனவ அமைப்புகள் முன் வைத்தனர்.

 

மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது :

 

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணியினை இம்மாதம் 20-ந் தேதிக்குள் தொடங்கி மூன்று வார காலத்திற்குள் முடிக்கப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மண்டல வாரியாக பிரிக்கவும், தூத்தூர் மண்டலத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் அமைக்கவும் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகு ஆய்வினை வருடாந்திர முறையில் மீன்பிடி தடைகாலத்தில் நடத்திட நடவடிக்கையில் உள்ளது. ஏ.வி.எம். கால்வாயினை விரைவாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரையுமன்துறை மீனவ கிராமத்தில் தடுப்புச்சுவர் அமைத்திட ரூ.15 கோடிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இனயம்புத்தன்துறை ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகளை சமபந்தப்பட்ட பஞ்சாயத்து மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட ரூ.40 கோடிக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.