நெல்லை மாவட்ட ஊராட்சி அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் அதன் பின் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு மாவட்ட ஊராட்சி அலுவலகம் கேடிசி நகரில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டது. அதன் திறப்பு விழா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன் தீப்சிங்பேடி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். 




தொடர்ந்து நிகழ்ச்சியில் சபாநாயகர் பேசுகையில், "திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில்  ஊராட்சி பள்ளி கட்டிடம், சமத்துவபுரம் வீடுகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து இருப்பதை பாதுகாக்க வேண்டும் என திமுக ஆட்சி அமைந்ததும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகளை மேம்படுத்த முதல்வர் சாலை மேம்பட்டு திட்டத்தில் நமது மாவட்டத்திற்கு மட்டும் வருடத்திற்கு 250 கோடி வீதம் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. மேலும் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திற்காக  பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு 605 கோடி நிதியும், களக்காடு நகராட்சி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி  உள்பட 7 பேரூராட்சிகள் பயன் பெரும் வகையில் 423 கோடி ரூபாய் என முதல்வர்  மொத்தத்தில் குடிநீர் திட்டத்திற்காக 1028 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது, இந்தப் பணிகள் இன்னும் 12 முதல் 15 மாத காலத்திற்குள் நிறைவடையும். இது நிறைவடைந்தால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டு மக்கள் பயன்பெறுவர்" என தெரிவித்தார்.
 


இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  முன்னதாக
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன் தீப்சிங்பேடி மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திகுளம், கரிசல்குளம் இடையே சிற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப் பணிகள், கங்கைகொண்டானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.