தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தை சார்ந்தவர் சுடலை. இவரது மகன் இசக்கிமுத்து. 35 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணி செய்து வந்துள்ளார். இவர் தற்போது நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் அடுத்துள்ள திம்மராஜபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே  மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக  தெரிகிறது. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாயுடன் தினசரி கட்டிட பணியை முடித்துவிட்டு இருவரும் முன்னும் பின்னுமாக வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.


இந்த வேளையில் சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே வந்தபோது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை தலை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த தாய் கண் முன்னே மகன் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுள்ளனர். இந்த நிலையில் கொலை நடந்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்த கடைகளை அடைத்து விட்டு வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் நிகழ்விடத்திற்கு வந்த மாநகர காவல் துறை துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சோரா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதனை நேரில் கண்ட தாயிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஒரு சில வழக்குகள் இசக்கிமுத்து மீது இருக்கும் நிலையில் முன் விரோதம்  காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் குடும்ப பிரச்சனை காரணமா?  என்பது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்து எப்போதும்  பரபரப்பாக காணப்படும் மாநகர பகுதியில் கொலை சம்பவம் நடைபெற்றது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது