கன மழை காரணமாக, குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீர் வெள்ளத்தால் குற்றால அருவியில் குளிப்பதற்காக வந்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.


குற்றால அருவியில் சிறுவன் மாயம்:


தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, திடீர் வெள்ளத்தால், அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர். 


அப்போது, நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தாருடன் குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயமானார். 


வெள்ளக்காட்சிகள்:


குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், படிப்படியாக நீரின் வேகமும், அளவும் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. அப்போது, அங்கு இருக்கும் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடுவதை பார்க்க முடிகிறது.