தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பருவநிலை மாறுபாட்டால் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.




தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30,000 தொழிலாளர்கள் உப்பளப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். 




தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழை மற்றும் சரியாக வீசாத மேல் திசை காற்று போன்றவற்றால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தனபாலன் கூறும்போது, இந்த ஆண்டு ஆடி மாத தொடக்கமான ஜூலை 17ஆம் தேதியிலிருந்து அவ்வப்போது மழை பெய்துள்ளது. மேலும் ஆடி மாதத்தில் வழக்கமாக வீசும் மேல் திசை காற்றும் இந்த ஆண்டு சரியாக வீசவில்லை. இந்த உப்பு உற்பத்திக்கு மிகவும் உகந்த இக்காலத்தில் உப்பு விளைச்சல் சரியாக நடைபெறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக உற்பத்தியாகும் அளவு விட இந்த ஆண்டு பாதி அளவுக்குத்தான் உப்பு உற்பத்தி ஆகி உள்ளது என்றார்.




இந்த ஆண்டு இதுவரை 12.5 லட்சம் டன் தான் உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளதாக கூறும் இவர், அக்டோபர் முதல் வாரம் வரை அதாவது இன்னும் ஐந்து வாரங்கள் உப்பு உற்பத்திக்கான காலம் உள்ளது. தற்போது மழை நீரின் உப்பளங்களில் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் முழுவதும் வடிந்து உப்பு உற்பத்தி இயல்பு நிலை திரும்ப ஒரு வாரமாகும். அதே நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. இன்னும் 10 சதவீதம் அளவுக்கு வேண்டுமானால் உப்பு உற்பத்தி நடைபெறலாம். இந்த ஆண்டு வழக்கமாக நடைபெறும் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியில் இருந்து 60% தான் உப்பு உற்பத்தி நடைபெறும் என தெரிகிறது. உப்பு குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. தற்போது உப்பு தரத்தை பொறுத்து ஒரு டன் 2000 முதல் 3000 வரை விலை போகிறது. நல்ல விலை இருப்பதால் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பெரிதாக நஷ்டம் ஏற்படாது எனக் கூறும் இவர் ஆனால் பெரிய அளவில் லாபம் இருக்காது என்கிறார்