இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது. ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நில நடுக்கோடு பகுதி ஆகும். இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயற்கை கோள்களை ஏவ முடியும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்த முடியும். ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்து உள்ளது. தொலையுணர்வு செயற்கைகோள்களை தெற்கு நோக்கியும், தொலைதொடர்பு செயற்கை கோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்படுகின்றன. இங்கு இருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் ஏவப்படுகிறது. ஆனால் கிழக்கு திசையில் 90 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது.




இதனால் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும். நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது. இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது.




குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். அதே போன்று கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு சுமார் 120 டிகிரி கோணத்தில் ஏவ வேண்டும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவதை விட சற்று அதிகம். ஆனால் இதனால் ஏற்படும் இழப்பை புவியீர்ப்பு சுற்று வேக அதிகரிப்பால் ஏற்படும் விசையை கொண்டு ஈடுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து முதலில் பிரியும் பாகம் வங்காள விரிகுடாவிலும், 2-வது பாகம் இந்திய பெருங்கடலிலும் விழும். இதனால் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுதல்களை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.




இதைத் தொடர்ந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன்படி குலசேகரன்பட்டினம் அருகே 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது.




திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக சிறப்பு வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டு, 8 தாசில்தார்கள் தலைமையில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை மாதவன்குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் 1350 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மீதம் உள்ள நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.




குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, குலசேகர பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமரா புரம், கூடல் நகர், அழகப்புரம், மாதவன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, நில அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வேலிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பு வேலிகள் அமைக்கும் இன்னும் 6 மாத காலத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண