மனைவியை கொலை செய்துவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட கணவன் தற்கொலை

மனநிலை சரி இல்லாமல் வேலை வெட்டிக்கும்  போகாமல் புலம்பியவாறே சுற்றித்திரிந்த அவரை 'யாராவது அழைத்துப் பேசி கொஞ்சம் ஆறுதல் கூறியிருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்து இருக்காது இரண்டு உயிரும் போய் இருக்காது

Continues below advertisement

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே 'அடஞ்சேரி' கிராமத்தில் கடந்த சில நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்த கணவர் 'லாடமுருகன்' கிரைண்டர் கல்லை தூக்கி, இரவில்  தூங்கி கொண்டிருந்த தன் மனைவியின் தலை மீது போட்டு கொலை செய்து விட்டு, பின்னர் தானும் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் நடந்த இக்கொலைச் சம்பவத்தை அறிந்த ஏர்வாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேர்களுடைய  உடல்களையும் அங்கிருந்து மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement


இது தொடர்பாக நாம் காவல்துறையினரிடம் பேசியபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற தர்ஹா அமைந்துள்ள  ஏர்வாடியை அடுத்த  அடஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பொன்னையா என்பவரின் மகன் (41) லாடமுருகன். மீனவரான இவர், சென்னையில் வேலை பார்த்தபோது, திருவண்ணாமலையை சேர்ந்த நர்சிங் பயின்ற பெண்ணான முத்துலட்சுமியை (35) காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த காலங்களில் தொடர்ந்து போடப்பட்ட கொரானா  லாக்டவுன், காரணமாகவும், வேலைவாய்ப்பின்றி வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்,  இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  நண்பர்கள் உதவியுடன்   தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளார் ஆனால்,  அங்கு திடீரென படகில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனையடுத்து, அவருடன் இருந்த சக மீனவர்கள் அவரை பத்திரமாக கடலிலிருந்து மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே மனநிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு இருந்த அவர், மனைவியுடன் தேவையில்லாத காரணங்களுக்காக  தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்  நேற்று இரவு நள்ளிரவில்தன் அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தன் காதல்  மனைவி மீது வீட்டிலிருந்த  கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இதில் மனைவி முத்துலட்சுமி  ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.  பின்னர்  தானும் அதே வீட்டினுள் மனைவியின் சடலத்தின் அருகிலேயே மேலே இருந்த மின் விசிறி மீது கயிற்றை போட்டு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  


அப்போது அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து  இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவருடைய ஐந்து வயதுடைய அந்த சிறுவன்  'அப்பா அம்மாவ கொன்னுட்டரு' ன்னு  அருகில் இருந்தவர்களிடம் கதறியபடி கூறியதைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்த நிலையில், இருவருடைய உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த அவரை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டதால்,  ஒரு பிரச்சினையும் இல்லாமல், தன்னருகில் உறங்கிக்கொண்டிருந்த தன் மனைவி மீது  கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த இந்தச்  சம்பவம் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மனநிலை சரி இல்லாமல் வேலை வெட்டிக்கும்  போகாமல் புலம்பியவாறே சுற்றித்திரிந்த அவரை 'யாராவது அழைத்துப் பேசி கொஞ்சம் ஆறுதல் கூறியிருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்து இருக்காது இரண்டு உயிரும் போய் இருக்காது' என இரண்டு பேரின் சடலங்களையும்,தாய் தந்தையரை இழந்து அனாதையான அந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளையும்  பார்த்து உறவினர்கள் அழுது புலம்பும் அந்தக் காட்சி அனைவரின் மனதையும் கசக்கிப் பிழிகிறது.

Continues below advertisement