தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தல், செம்மரக்கட்டைகள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை மற்றும் அனைத்து உளவுப் பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிரமாக வாகன தணிக்கை மற்றும் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.



 

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் ராகேஷ் என்பவருக்கு சொந்தமான ஹரிபாலகிருஷ்ணா  குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் கண்காணிப்பாளர் சந்தீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான போலீசார் அந்த குடோனுக்கு சென்றனர். அங்கு ஒரு டாரஸ் லாரியில் தார்ப்பாயால் மூடப்பட்ட நிலையில் சரக்கு ஏற்றப்பட்டு இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 5 அடி நீளம் கொண்ட செம்மரக்கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதில் சுமார் 20 டன் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு  10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.



 

செம்மரங்கள் ஆந்திரா மாநிலம் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. அதே போன்று இலங்கை, பாகிஸ்தான, நேபாளம் ஆகிய நாடுகளிலும் வளர்கிறது. இது 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இந்த செம்மரங்களுக்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. செம்மரங்கள் சித்த மருத்துவத்தில் நீண்ட வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரும வியாதிகள், மூலம், சர்க்கரை பாதிப்பு, கை கால் மூட்டு வீக்கம், விஷக்கடிகள், பாக்டீரியா, மற்றும் புற்று நோய் ஆகிய நோய்களுக்கு செம்மரத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் செம்மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உண்டு. ஜப்பான் நாட்டில் திருமணமான பெண் புகுந்த வீட்டுக்கு போகும்போது, ஒருவித இசைக்கருவியை எடுத்துச் செல்வது வழக்கம். இந்த இசைக்கருவியை தயார் செய்ய செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. இதேமாதிரி ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் ஒயின்களில் செம்மரத் தூள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒயின்களில் நிறத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஜப்பானில் இந்த மரத்தால் உருவாக்கப்படும் வீடுகள் யுரேனியம் கதிர்வீச்சை தடுப்பதாக பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பொதுவாக செம்மரம் மருத்துவ குணங்கள் கொண்டது. தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு மரப்பாச்சி பொம்மைகள் செம்மரங்களில் செய்து விற்கப்பட்டன. குழந்தைகள் இதை தொட்டு, நுகர்ந்து விளையாடும்போது அதன் மருத்துவ பலன்கள் கிடைக்கும். இந்த மரங்கள் தற்போது வேமாக அழிந்து வருவதால் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்பட்டு அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.



 

இதனால் ஆந்திராவில் இருந்து செம்மரங்கள் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கண்டெய்னரில் சரக்குகளுக்கு இடையே பதுக்கி கடத்துவதற்காக வைத்து இருந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் இது தொடர்பாக குடோனில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக குடோனின் உரிமையாளரான தூத்துக்குடியை சேர்ந்த ராகேஷ், லாரி உரிமையாளரான தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.