கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகள் ,நகர பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்தது ,இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசுகிறது.



 

மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது , முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மாம்பழத்துறையாறு அணை பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 71.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொட்டாரம், மயிலாடி, இரணியல், ஆணைக்கிடங்கு, பூதப்பாண்டி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.கோடையில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் ரம்மியமான சூழல் நிலவுகிறது. குமரியை குளிர வைத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

 

பேச்சிப்பாறை 71.2, பெருஞ்சாணி 22, சிற்றாறு-1-66.4, சிற்றாறு-2- 16.2, மாம்பழத்துறையாறு 70.6, பாலமோர் 62.4, மயிலாடி 7.2, கொட்டாரம் 4.26, ஆணைக்கிடங்கு 61.4, குளச்சல் 4.2, குருந்தன்கோடு 5.8, நாகர்கோவில் 10, பூதப்பாண்டி 20.2, சுருளோடு 12.4, கன்னிமார் 4.2, புத்தன் அணை 23.4, முள்ளாங்கினாவிளை 6.2, அடையாமடை 17, கோழிபோர்விளை 18, திற்பரப்பு 25.

 



 

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் 38.57 அடியாக உள்ளது. அணைக்கு 742 அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.80 அடியாக உள்ளது 10 நாட்களில் 6 அடி உயர்ந்த பெருஞ்சாணி அணைக்கு 253 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 8.92 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 9.02 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 19.50 அடியாக உள்ளது.

 



 

மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 5 அடியை எட்டியுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டமும் 12.50 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பாசனக் குளங்களும் நிரம்பி வருகின்றன.திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு திற்பரப்பு பகுதியில் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர்.