நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே அனைத்து இடங்களும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நெல்லை டவுண் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் அதிக அளவு மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுவதை தடுக்க 68 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் கால்வாய் தூர்வரப்பட்டு வருகிறது. சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார் குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும்பணி நடந்து வருகிறது. மானூர் கலைக்கல்லூரியை பொறுத்தவரை இப்பொழுது தான் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  11 கோடி ரூபாய் நிதி கட்டிட அனுமதிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது., எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்., பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள்., வைகோ இப்படி பேசுவது தேவையில்லாத விஷயம். இந்தியை திணிப்போம் என மத்திய அரசு எங்கும் இதுவரை சொல்லவில்லை., இந்தியை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை வந்தாலும் அந்த மாநில தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என உள்ளது.


 




நாடு வளர வேண்டும் என்றால் கட்டமைப்பு வசதியை உருவாக்க வேண்டும். கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சி அரசு. தங்க நாற்கர சாலை திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த கட்டமைப்பு மேம்பாட்டு வசதியும் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும். அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும் என தெரிவித்தார்.