ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த வடமநில தொழிலாளர்களில் ஒருவர்  விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.




ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மச்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த சிலர் வேலை செய்து வருகின்றனர். இந்த ஆலையில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் இருந்த ரசாயனம் கலந்த கழிவுநீரை அங்கு பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபின் ஓரம் (24) என்பவர் அந்த தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் கீழே நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் ஜாஜ்மன் குஜூர்(20), அனில்மாஜி (25) ஆகிய 2 பேரும் அவரை தேடி தொட்டிக்குள் இறங்கினர். அப்போது அந்த தொட்டி கீழே சாய்ந்து விழுந்துள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்களும்  மயங்கி கிடந்தனர். அதனை தொடர்ந்து அவர்களை மீட்டு தொண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.






அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் நபின் ஓரம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜாஜ்மன் குஜூர், அனில்மாஜி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விஷ வாயு தாக்கி உயிரிழந்த நபின்ஓரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருவாடானை தாசில்தார் செந்தி்ல்வேல் முருகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மச்சூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் ராதா, தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச் சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும் இந்த விஷ வாயு விபத்து குறித்து, உள்ளூர் மக்கள்  ஒரு சிலரிடம் நாம் பேசுகையில், கடந்த ஆறு  மாதங்களாகவே இந்த மீன் எண்ணெய் கம்பெனிக்கு மீன்களை ஏற்றி  வரும் கனரக வாகனங்களால் இந்த பகுதி சாலை சேதமடைந்து வருவதை தொடர்ந்து, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்து  எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த கம்பெனியில் இருந்து அவ்வபோது துர்நாற்றம் வீசுகிறது.




அந்த கம்பெனி ஊருக்கு வெளியில் இருந்தாலும், அங்கிருந்து வரும் துர்நாற்றத்தை கிராம மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப் படுகிறோம். ஆனால், எப்படித்தான் இந்த வீச்சத்தை தாங்கிக்கிட்டு அந்த பசங்க வேலை செய்யறாங்கன்னு'   எங்களுக்கு புரியவில்லை, அதுமட்டுமல்லாமல், முதலில்  மீன் எண்ணை எடுப்பதற்காக,  பதப்படுத்தப்பட்ட மீன்களின் மீது கெமிக்கல் கலக்கும் போது விஷவாயு வெளியாகி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது, ஆனால், உண்மை  என்னவென்றால், கம்பெனியில் இருந்து வெளியேறும் கெமிக்கல் கழிவுகள் ஒரு தொட்டியில் சேகரித்து வைக்கப்படும். அதை மாதம் ஒரு முறை மட்டுமே வெளியேற்றம் செய்து தொட்டி சுத்தம் செய்யப் பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று தொட்டியில் சேகரிக்கப்பட்ட கெமிக்கல் கழிவுகளை வெளியேற்றும்போதுதான்,  இந்த மூன்று தொழிலாளர்களும் விஷ வாய்வு  தாக்கியதால் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்துள்ளனர் அதில் ஒருவர் உயிரிழந்து விட்டார். 'யாரு பெத்த புள்ளையோ' இங்க உசுர விட்டுட்டான்' என வேதனை தெரிவித்தனர். குறிப்பா சொல்லனும்னா, 'நாளக்கி எங்களுக்கே கூட இந்த ஆபத்து வராதுன்னு என்ன நிச்சயம்' என்பதே  இவர்களின்  அச்சம் நிறைந்த கேள்வியாக உள்ளது.