நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா  நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனர் நிகர் சாஜி மற்றும் மலேசியா கோலாலம்பூர் மெட்ரோ செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் அப்துல் காதர் பின் அசன் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர். அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற 260 பேருக்கு நேரடியாக பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.


இதற்கு முன்னதாக விழா பேருரை ஆற்றிய இந்திய விண்வெளி துறையின் ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி,


”பெண் கல்வி மற்றும் அதிகாரம் ஆகியவை சமூகத்தை வடிவமைக்கின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்து ஆண்களுக்கு பின் தங்கியவர்களாகவே பெண்கள் பல வழிகளில் இருந்துள்ளனர். வாக்களிப்பதற்கு, சொந்தமாக சொத்துக்கள் வாங்குவதற்கு, சுயதொழில் அல்லது சொந்தமாக பணி செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். நான் பெண் என்ற ஒரே காரணத்திற்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


பெண்களுக்கு பல பகுதிகளில் தற்போதும் அதிகாரம் மற்றும் அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு ஆண் கல்வி அறிவை பெறும் பொழுது தனிநபரின் கல்வியறிவு உயர்கிறது. அதே நிலையில் ஒரு பெண் கல்வி அறிவை பெரும்போது ஒரு குடும்பத்தின் கல்வி அறிவு பெருக்கம் அடைகிறது. தற்போதைய நிலையில் பெண்களின் கல்வி அறிவு 77 சதவீதமாகவும், அதே நேரத்தில் ஆண்களின் கல்வியறிவு 85 சதவீதத்திற்கும் மேலாகவும் இருந்து வருகிறது. இது மோசமான நிலை ஒன்றுமில்லை. எழுத்தறிவுக்கு அப்பால் கல்வி என்பது பெண்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்காக அதிகம் பயன்படுகிறது.


சமத்துவமின்மை செயல்பாட்டை கல்வி குறைப்பதுடன் குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான வழிமுறையை வகுக்கிறது. படித்த பெண்கள் கணிசமாக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். பல்வேறு துறைகளில் தலைமைத்துவ பதவிகளில் உள்ளனர். கல்வி வாழ்க்கையை மாற்றுகிறது. பெண்களின் திறன் மற்றும் மேம்பாட்டின் மூலமே இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும் என தெரிவித்தார். பேராசிரியர் விக்ரம் சாராபாய், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள சிறிய மீன்பிடி குக்கிராமமான தும்பாவில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி பணிக்கான நிறுவனத்தை அமைப்பதற்கான இடத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பூமத்திய ரேகை கோட்டின் அருகாமை இடத்தை தேர்வு செய்த நிலையில் அங்கு பழமையான மற்றும் புராதனமான புனித மேரி மேக்தலின் தேவாலயம் இருந்தது. இந்த தேவாலயத்தின் பேராயரிடம் விக்ரம் சாராபாய் விண்வெளி துறை தொடர்பான நோக்கங்களை விளக்கி தெரிவித்தார். அங்குள்ள தேவாலய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இடம் கொடுக்க கிடைத்தது. இந்த நிலையில் பேராயரின் மிகப்பெரிய முடிவாக தேவாலயம் அமைந்த இடத்தில் தும்பா பூமத்தியரேகை ஏவுதளத்திற்கான இடம் கிடைக்கப்பெற்றது. அதன் பின்பு அங்குள்ள தேவாலயம் ராக்கெட் வடிவமைப்பு மையமாகவும் பேராயர் வீடு விஞ்ஞானிகளின் அறையாகவும் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தான் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் பல விண்வெளி மையங்கள் உருவாக தொடங்கியது.


இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை உலக நாடுகளும் மதிக்கும் மிகப்பெரிய விண்வெளி மையமாக செயல்படுகிறது. தற்போது நமது நாடு பல்வேறு உலக தரம் வாய்ந்த ராக்கெட் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்திய நாடு தற்போது புவி ஒத்திசைவு, சூரிய ஒத்திசைவு, அளவியல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கான விண்கலங்களை ஏவும் திறன் கொண்டவையாக மாறியுள்ளது. இந்திய தொழில் நுட்பங்கள் தற்போது உலக அளவில் நிரூபணமாகி வருகின்றன. நமது நாட்டில் ஒரு தேவாலயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளது. சமூகத்தின் வடிவமைப்பை மதம் மற்றும் ஆன்மீக அமைப்பின் சிறந்த கூறுகளால் மாற்ற முடியும் என்ற செய்தி அதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக”அவர் தெரிவித்தார்...