தமிழகத்திலேயே பாரம்பரிய நாட்டுப் படகு மூலம் மீன் பிடிக்கக்கூடிய ஒரே மாவட்டம் நெல்லை மாவட்டம் தான். இங்கு மீன்பிடி தங்குதளமோ, மீன்பிடித் துறைமுகமோ இல்லாததினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் தான் மீன்பிடித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடற்கரை ஒட்டி இரண்டு கடல் மைல் தொலைவு வரை வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர். இதனால் நாட்டுப் படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைந்து வருகின்றன. இதனால் கடலுக்குள் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவதும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு பதிவு செய்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. 




இந்த சூழலில் நேற்று முன்தினம் இடிந்தகரை கடற்பகுதியில் இருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் இடிந்தகரையைச் சார்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் படகில் இருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தத்தளித்துள்ளனர். அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மற்ற நாட்டுப் படகு மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர். இதில் வினோத் மற்றும் அண்டன் ஆகிய இரு மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று  இடிந்தகரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் சுமார் 3000 மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இடிந்தவரை ஊர்மக்கள் கூடி, நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தொடர்ந்து இது போன்று கடற்கரை ஓரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும், இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர்மான அப்பாவு இது பற்றி சுமூகமாக பேசி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் திட்டமிட்டபடி, நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் நெல்லையின் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மீனவர்கள் இதில் பங்கு பெற்றுள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பிற்பகல் மீண்டும் ஊர் மக்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளனர். விரைவில் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மேலும் போராட்டம் நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.