நெல்லை பாளையங்கோட்டையில் அண்ணா விளையாட்டு மைதானம், வ.உ.சி மைதானம் ஆகியவை மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய களமாக இருந்து வருகிறது. குறிப்பாக வ.உ.சி மைதானம் போக்குவரத்திற்கு எளிதாகவும், பாளையங்கோட்டை மைய பகுதியிலும் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் மைதானத்திற்கு வந்து செல்வது வழக்கம். இந்த மைதானம் நெல்லை மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது புதுப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தை திறந்து வைத்தார். இதில் பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தில் நேற்று முதல் போட்டியாக எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 




இந்த சூழலில் அங்குள்ள கழிவறைகளில் ஊக்க மருந்து கிடக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அஸ்திமின் (astymin) விஐடி பி-12 மற்றும் அமினோ ஆசிட் ( VIT B12 and Aminoacids) ரினர்வ் பிளஸ் (renerve plus) ஆகிய மூன்று ஊக்க மருந்துகளின் பயன்படுத்தப்பட்ட கவர்களும் ஊசிகளும் ஆங்காங்கே கிடக்கிறது.  ஊக்க மருந்து என்பது எந்த ஒரு செயலிலும் நமது உடல் திறனை களைப்படையாமல் இருக்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் மருந்து ஆகும். இதனை பயன்படுத்துவதால் தசையின் வலுவை அதிகரிப்பது அல்லது தசை களைப்படைவதை மட்டுப்படுத்தும் மருந்து ஆகும்.  இதனை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கழிப்பறையில் ஆங்காங்கே கிடக்கும் ஊக்க மருந்துகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




குறிப்பாக நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது வீரர்கள் இதனை பயன்படுத்தினார்களா? அல்லது ஏற்கனவே வெளியூர்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க சென்ற வீரர்கள் இந்த போதை ஊசிகளை பயன்படுத்தினார்களா என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. சட்டப்படி விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துவது குற்றம் என்றபோது நெல்லை மாவட்டத்தில் அரசு மைதானத்தில் அதுவும் மாவட்ட ஆட்சியர் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அன்று ஊக்க மருந்துகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  நெல்லையில் முக்கிய மைதானமான வ உ சி மைதானத்தின் கழிவறைகளில் போதை மருந்து ஊசிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண