விடிய விடிய விசாரணை- தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட கேன்:


ஜெயக்குமார் உயிரிழப்பு தொடர்பாக உறவினர்கள் மற்றும் மகன்களிடம் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் நேற்று இரு மகன்களையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்கள் வீட்டில் விடிய விடிய 2 மணி வரை விசாரணையானது நடைபெற்றதாக தெரிகிறது.  இருப்பினும் தற்போது வரை இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் புதிய புதிய திருப்பங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இன்று தற்போது தோட்டத்தில் காலியாக கிடந்த கேன் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஜெயக்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் அந்த கேனில் பெட்ரோல் தடயம் எதுவும் உள்ளதா?  எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து திசையன்விளை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினிடம் அரை மணி நேரமாக விசாரணை நடத்தி வருகிறார்.  மேலும் கைப்பற்றப்பட்ட கேனை தனிப்படை போலீசார் விசாரணைக்காக எடுத்து சென்றனர். இதனிடையே  ஜெயக்குமார் வீட்டின் தோட்டத்தில் அவர் உடல் கிடந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றில் உள்ள நீரின் அளவு மற்றும் ஆழத்தை உவரி காவல் ஆய்வாளர் சகாயசாந்தி தலைமையில் சோதனையிட்டு வருகின்றனர். 5 நாட்களாகியும் ஜெயக்குமார் மரணத்தில் உள்ள மர்மம் விலகாத நிலையில் புதிய புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்த விவகாரத்தில் தற்போது வரை பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. முதலில் ஜெயக்குமார் எழுதியதாக அடுத்தடுத்து இரண்டு கடிதங்கள் வெளியாகியது. அதில் தற்கொலையாக இருக்கலாம் என முதலில் காவல்துறையினர் விசாரணையை துவங்கிய நிலையில் அதன் பின் கடந்த மார்ச் மாதம் அவர் கைப்பட எழுதிய மற்றொரு கடிதம் கைப்பற்றப்பட்டது. இரண்டிலும் உள்ள கையெழுத்தும் வித்தியாசமாக இருந்த நிலையில் அதில் பல்வேறு கேள்விகள் எழுந்தது. மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து கட்சியினர், தொழிலதிபர்கள் என குறிப்பிட்ட சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்த நிலையில் காவல்துறையினர் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வந்தனர். 




ஜெயக்குமார் மரணத்தில் வலுக்கும் சந்தேகம்:


அதன்பின் பிரேத பரிசோதனை அறிக்கையும், அவர் இறந்த நிலையில் கை, கால்கள், கழுத்து ஆகியவை கட்டப்பட்ட நிலையில் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியான நிலையில் இந்த இரண்டு தகவல்களின்படி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர் அதனடிப்படையில் விசாரணையின் கோணத்தை மாற்றியுள்ளனர். காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டு விசாரணையானது நடந்து வரும் நிலையில் தற்போது வரை அந்த வழக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கிடையில் ஜெயக்குமார் 2ஆம் தேதி முதல் காணாமல் போனதாக மகன் புகாரளித்திருந்த  நிலையில் அன்று இரவே அவர் திசையன்விளை அருகே உள்ள கடை ஒன்றிற்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. பின் அவர் என்ன ஆனார் ? எங்கு சென்றார் என்று  தெரியவில்லை. அதன்பின் தற்போது அவர் கடைக்குள் வந்து டார்ச் லைட் ஒன்றை வாங்கி செல்லும் முழு காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதன்பின் அவர் கார் எங்கெங்கு சென்றது என்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். அதன்பின் ஜெயக்குமார் வீடு திரும்பாத நிலையில் அவர் வெளியே எடுத்து சென்ற கார் வீட்டின் அருகே நின்றது எப்படி? கார் சாவியை எங்கே?  அவரது செல்போன் எங்கே? அவரது செல்போன் சிக்னல் இறுதியாக எங்கு நிறுத்தப்பட்டது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.