தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை நோக்கி கீழ வல்லநாடு துணை மின் நிலையம் அருகே இன்று அதிகாலை வேனும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது வேன் அருகே உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடத்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் பின்னால் மற்றொரு வேனில் வந்த நபர்கள் விபத்தில் வேன் சிக்கியதை பார்த்து பதறினர். மேலும் அதில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாமல் செய்வதறியாது பரிதவித்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இது குறித்து  தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு வயது குழந்தை உட்பட 16 பேரை காயங்களுடன் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தது. 


இதுகுறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து சுமார் 30 பேர் தென் தமிழகத்திற்கு ரயிலில் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்து அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து இரண்டு தனியார் வேனை வாடகை எடுத்து உள்ளனர். அதன் பின் அங்கிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான்  தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன், பார்வதி ஆகிய இரண்டு பேரும், குழந்தை ஸ்ரீ யும்  பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது.


தொடர்ந்து விபத்தில் இறந்த மூன்று பேரின் உடலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மாதிரிகளை சேகரித்து சென்றனர் இதற்கிடையில் உயிரிழந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது உடலை இங்கிருந்து எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற்கூறாய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற் கூறாய்வு செய்து உடலை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்துள்ளது