இந்தியாவில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது.  திமுக, அதிமுக சார்பில் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 


தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகள் ஆக பிரதமர் மோடி இந்தியாவில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தேசிய அளவில் 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெரும். தமிழகத்தில் கூட்டணி வைத்தோ தனியாகவோ, கட்சி தலைமை முடிவின்படி போட்டியிட்டு அதிக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றுவோம். தற்போது  தமிழகத்தில் ஆளும் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. வரும் தேர்தலில் தமிழக மக்கள் தாமரைக்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார். 


 





 
தொடர்ந்து திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியா என்ற கேள்விக்கு யார் வேட்பாளர் என்பதை கட்சி அறிவிக்கும் என்றார். தமிழகத்திலேயே திருநெல்வேலியில் தான் முதன்முறையாக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் ஒரு மாதம் முன்பே தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.  இப்போது நெல்லையில் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ள நிலையில்  நெல்லை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். நல்ல நாள் என்பதால் தலைமையின் அனுமதியைப் பெற்று அவர் அவ்வாறு செய்ததாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் தேதி எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் தைப்பூச தினமான இன்று திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அவரது சொந்த இடத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது அவரே வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.