தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள்  உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்றது. முன்னதாக வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிவடைந்ததை அடுத்து வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்கும் பணி தொடங்கியது.


முக்கிய வேட்பாளர்கள்:


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் பகுஜன் சமாஜ் பார்ட்டி சார்பில் பாலசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஜான்சி ராணி ஆகியோரும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்யாவும் போட்டியிடுகின்றனர்.


மொத்தமாக நெல்லை தொகுதியில் 26 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று மூன்று பேர் தங்களது வேட்பு மனுக்களை  வாபஸ் பெற்றனர். மீதமுள்ள வேட்பாளர்களுக்கு சின்னம்  வழங்கும் பணி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி தலைவர்களிடம் அவர்களின் நிரந்தர  சின்னங்களை பெறுவதற்கான கடிதத்தை ஏற்கனவே வழங்கிய நிலையில் அவர்களுக்கான சின்னங்கள் முதலில் ஒதுக்கப்பட்டது.


18 சுயேட்சை வேட்பாளர்கள்:


பின்னர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடக்கூடிய 18 சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டு, அதற்கான அத்தாட்சி கடிதமும் வழங்கப்பட்டது. இறுதியாக திருநெல்வேலி தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் நான்கு பேர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச்  சார்ந்த ஏழு பேர் சுயேச்சைகள் 12 பேர் என 23 பேர் களத்தில் உள்ளனர்.


15 வேட்பாளர்களுக்கு அதிகமாக உள்ளதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் முன்னணி அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக அமைய போகிறது என்ற எதிர்பார்ப்பில் நெல்லை தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது