சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ.67 லட்சத்துக்கு ஏலம் விடபட்டுள்ளது.

 

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

 

இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதே போல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். 

 

கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலையை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். 

 



 

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக பஸ், வேன், கார், ஜீப் மற்றும் டிரக்கர் போன்ற வாகனங்களில் சுற்றுலா வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்களது ஊழியர்களை வைத்து சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது.

 



 

இந்த நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவின் பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் நடந்தது. இந்த ஏலம் மற்றும் டெண்டரில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை கன்னியாகுமரி மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 111க்கு ஏலம் எடுத்துள்ளார்.