தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் இந்த சோதனை குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மேலப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது,


என்.ஐ.ஏ சட்டவிரோதமான சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பரக் அப்துல்லா வீட்டில் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தி டெல்லியில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் என்ஐஏ அவரை கைது செய்துள்ளது. அதோடு மதுரையில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் நஜிமா பேகம் வீட்டில் அத்துமீறி நுழைந்து கையிலே பை நிறைய பணம் எடுத்த சென்று வைத்துவிட்டு கைது செய்து அழைத்து செல்லும்போது அந்த  பணத்தை திரும்ப எடுத்து சென்றுள்ளனர். அந்த  நேரத்தில் எங்கள் மாநில செயலாளரிடம் கையெழுத்த போடுங்கள் உங்கள் கணவரை நாங்கள் கைது செய்கிறோம் என்று கேட்டுள்ளனர். அதனை மறுத்தபோது அவரின் பத்து மாத குழந்தை கதறி அழுதபோதும் கையெழுத்து போட்டால் தான் பால் குடிக்க அனுமதிப்போம் என அராஜகத்தோடு மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே கைது செய்யப்பட்ட எஸ்டிபிஐ, பாப்புலர் பிராண்ட் ஆப்  தலைவர்களை உடனடியாக நிபந்தனையின்றி  ஒன்றிய அரசின் கைப்பாவையான என்ஐஏ விடுதலை செய்ய வேண்டும். மாநில சுயாட்சி பேசும் தமிழக முதல்வர் ஆட்சியின் சிறப்பை கெடுக்கவே இதுபோன்று கைது செய்கிறார்கள். எனவே ஜனநாயகபடி அனைத்து ஜனநாயக சக்திகளும் இதை கண்டிக்க முன்வர வேண்டும்


நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும் எஸ்டிபிஐ கட்சி உண்மையை சொல்கிறது ஒன்றிய அரசின் தவறுகளை தோலுறிக்கும் எங்கள் போராட்டத்தை முடக்கி விட்டால் இந்தியாவில் எந்த செயலையும் செய்து விடலாம் என மோடியும், அமித்ஷாவும் கருதுகிறார்கள். என்.ஐ.ஏ ஏவல்காரர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த கோபத்தில் போலி வழக்கில் நாடு முழுவதும் அராஜகத்தை நடத்தி வருகிறது. எனவே எஸ்டிபிஐ சரியான பாதையில் செல்கிறது, இது போன்ற கைது நடவடிக்கைகளால்  எங்களது பணிகளை நிறுத்தி விடலாம், தடுத்து விடலாம் என்று ஒன்றிய அரசின் தலைவர்கள் மனப்பால் குடித்தால் அது தவறு என்பதை நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள். எனவே எங்கள் போரோட்டத்தை இன்னும் வீரியத்துடன் கொண்டு செல்வோம்.  


பயங்கரவாதத்தை பேசி வரும் ஆர்எஸ்எஸ் மீது சோதனை நடத்த வக்கில்லாத ஒன்றிய அரசு  எங்களை குற்றவாளிகளாக்க முயற்சித்து வருகிறது. எனவே அம்பேத்கர், காந்தியின் ஆத்மா அவர்களை ஒரு போதும் மன்னிக்காது. சிறுபான்மை மக்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர்.  எதிர்காலத்தில் தமிழகத்தில் என்ஐஏ நுழைய முடியாது என்கின்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். எங்கள் அலுவலகத்தில் தீவிரவாத பயிற்சி எங்கயாவது நடைபெறுவதை நிரூபிக்க முடியுமா? எனவே பாஜக ஆர்எஸ்எஸ் கரங்களை ஒடுக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து இணையானது. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் இந்த சோதனை நடத்துகிறார்கள். இது மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக உள்ளது என தெரிவித்தார்.