எம்.பி.ஏ படித்து விட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த நபர் காதல் தோல்வியால் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு மூன்று வருடமாக கன்னியாகுமரி பகுதியில் சுற்றி வந்தவரை சுற்றுலா வந்த அவரது உறவினர்கள் அடையாளம் கண்டு காவல் துறை உதவியுடன் மீட்டனர்.

 

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஏராளமான ரயில்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து குமரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் சில மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் வருகை தருவது அதிகரித்து வருகிறது. அப்படி வரும் மனநலம் குன்றிய சிலர் குமரியில் சுற்றி திரிவது வழக்கம். அந்த வகையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இங்கே சுற்றி திரிந்திருக்கிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாகவே கன்னியாகுமரி பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில் கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள வங்கிகளின் நடைபாதையில் பெரும்பாலும் இவர் அமர்ந்திருப்பது வழக்கம். எப்பொழுதும் ஆங்கில பத்திரிகைகளை கையில் வைத்து படித்துக் கொண்டிருப்பார்.

 

 



 

3 ஆண்டுகள் கன்னியாகுமரியில் மனநோயாளியாக சுற்றித்திரிந்த வாலிபர் அப்பகுதியில் உள்ள மக்கள் வழங்குகின்ற உணவுகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அப்போது மனநலம் பாதித்த நிலையில் அப்பகுதியில் அழுக்குத் துணியுடன், வருடக்கணக்காக வெட்டப்படாத சடைமுடியுடன் காணப்பட்ட குறிப்பிட்ட நபரை கண்டதும் காணாமல் போன தமது உறவினராக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

 



 

அப்போது அவர் அருகில் சென்று பேச்சுக் கொடுத்து உள்ளார். முதலில் பேச மறுத்த அவர் பின்னர் முருகனிடம் பேசத் துவங்கி உள்ளார். அவரது ஊர் மற்றும் பெயர் குறித்து விசாரித்ததில் சந்தேகம் அடைந்த அதே நபர் என தெரிந்தது. உடனடியாக அவர் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்து இருந்து சென்று விடாதபடி பிடித்து வைத்துக் கொண்டார். பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் உதவியுடன் அவரை அருகில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்து புதிய ஆடைகளை வாங்கி அணிவித்தனர்.
  அவர் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்தவர் எனவும் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போனதாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.பின்னர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள தென்மலையில் உள்ள அவரது உறவினர்களுக்கு முருகன் தகவல் கொடுத்தார். மனநலம் பாதிக்கப்பட்டு மூன்றாண்டுகளாக கன்னியாகுமரியில் இருந்த அந்த நபர் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற இடத்தை சேர்ந்த முத்து (35) என்பது தெரியவந்தது. அவர் ராஜபாளையத்தில் தமது பி.காம் பட்டப்படிப்பையும் அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப் படிப்பையும் முடித்துள்ளார்.

 



 

பின்னர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பின் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சென்னை போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் உறவினர்கள் அவரை தேடும் முயற்சியைக் கைவிட்டனர். இந்த நிலையில்தான் நேற்று திடீரென கன்னியாகுமரியில் அவர் இருப்பது தெரியவந்தது. அவரது உறவினர்கள் உடனடியாக கன்னியாகுமரி வந்தனர். பின்னர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விவரங்களை தெரிவித்தனர். போலீசார் உரிய விசாரணைக்கு பின்னர் உறவினர்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.