கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாளில் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்ட வசமாக பள்ளிக்கு மாணவர்கள் வரும் முன் நிகழ்ந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது குருந்தங்கோடு சுற்றுவட்டாரபகுதிகளில் பெய்து வரும் கனமழையால 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் கொடுப்பைக்குழி அரசு மேல்நிலை பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு மூன்றே நாளான சுற்றுச்சுவர் சுமார் 200-மீட்டர் நீளத்திற்கு இடிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததாலும் பள்ளி திறந்து மாணவர்கள் வருவதற்குள் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடிந்து விழுந்த சுற்றுசுவர் கட்டுமானங்களை அகற்றி மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாளில் பள்ளி சுற்றுச்சுவர் மழையால் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.