தமிழ்நாட்டில் முதல் முறையாக நெல்லையில் காணி பழங்குடியினருக்கு வாழ்வியல் அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காணி மக்களால் விளைவிக்கப்படும் 40 வகையான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை அருகே மயிலார் என்ற பகுதியில் ஏராளமான காணி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அங்கு இயற்கை முறையில் விவசாய பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.



 

 

இருப்பினும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதில் அவர்களுக்கு பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வந்தது இந்த சூழ்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காணி பழங்குடி இன மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் விளைவிக்கும் பொருட்களை நகர்ப்பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி பாளையங்கோட்டை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காணி பழங்குடி இன மக்கள் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அடுத்த கட்டமாக அவர்களுக்கான நிரந்தர வாழ்வியல் அங்காடி ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முடிவு செய்தார் .



 

 

அதன்படி பாளையங்கோட்டை தீயணைப்பு துறை அலுவலகம் அருகில் காதி கிராப்ட் கட்டிடத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கம் இணைந்து காணி பழங்குடியினர் வாழ்வியல் அங்காடி அமைத்துள்ளனர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இந்த வாழ்வியல் அங்காடியை இன்று திறந்து வைத்தார் பிறகு அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பலாப்பழம், மூட்டு பழம், மிளகு, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டதுடன் அதை சாப்பிட்டு ருசி பார்த்தார்.

 

காணி பழங்குடியினர் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த வாழ்வியல் அங்காடியை ஏற்று நடத்துகின்றனர். இக்குழுவினர் மயிலார் பகுதியிலிருந்து தங்கள் இன மக்கள் விளைவிக்கும் உணவு பொருட்களை வாங்கி வந்து அங்காடியில் விற்பனை செய்ய உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது மொத்தம் 47 காணி குடும்பத்தினர் இந்த வாழ்வியல் அங்காடி திட்டத்தில் இணைந்துள்ளனர்.



 

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த வாழ்வியல் அங்காடியின் நோக்கம் காணி மக்களின் வாழ்வாதாரம் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் இந்த கடையில் பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு மாதங்களாக மாவட்ட நிர்வாகம் ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட அனைத்துத் துறைகளின் முயற்சியால் அங்காடி உருவாக்கப்பட்டுள்ளது முதல்கட்டமாக காணி மக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு என்ன தேவை குறிப்பாக கொரனோ காலத்தில் அவர்களின் வாழ்வியல் பாதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. 

 

 

அப்போது அவர்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும் வசதி வேண்டும் என்று கேட்டனர். அதன்படி மகாராஜநகர் உழவர் சந்தையில் அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதன்பிறகு வாழ்வியல் அங்காடி தற்போது அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது சுமார் 40 பொருட்களுக்கு ஆர்கானிக் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது .

 

 

மேலும் சில பொருட்களுக்கு சான்றிதழ் வாங்க முயற்சி எடுக்கப்படும் அதேபோல் காணி இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் பயிற்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி போன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தற்போதைக்கு பெரிய அளவு உற்பத்தி இல்லாததால் ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை, நிச்சயம் வருங்காலத்தில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அங்காடி மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.