தமிழக-கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கேரளா கொண்டு செல்ல இருந்த 20 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்

 

தென்காசி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகள் மேற்கரை மற்றும் புளியரை என இரண்டு பகுதிகள் உள்ளது. இதில் பெரும்பாலான வாகனங்கள் புளியரை வழியாக தான் சென்ற வருவது வழக்கம். இதனால் புளியரை வழியாக கேரளா செல்லும் சாலையில் வனத்துறை, காவல்துறை, வணிகவரித்துறை, வட்டார போக்குவரத்து துறை ஆகிய நான்கு துறைகளின் சோதனை சாவடிகள் உள்ளது.

 


 

இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கேரள காவல்துறையினர் அங்கு தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதே போன்று நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இன்று தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களின் எல்லை பகுதியில் உள்ள காவல் துறையினர் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இரு மாநில எல்லைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் கும்பல்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

 


 

இந்நிலையில் இன்று தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு பால் கொண்டு செல்லும் டேங்கர் லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

 

இந்த வாகனத்தை சுரண்டையை சேர்ந்த வாகன ஓட்டுநர் காளி சங்கர் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த ஒட்டுநரால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரியை தீவிர சோதனை செய்த போது, அந்த வாகனத்தில் பண்டல் பண்டலாக பணம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய். அனைத்தும் 3 பண்டல்களாக பிரிக்கப்பட்டும் 500 ரூபாய் கட்டுகளாக கட்டப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.

 


 

உடனடியாக தமிழ்நாடு காவல்துறையினர் அந்த பணத்தை கேரள மாநில காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் காளிராஜ் வசம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பணத்தை செங்கோட்டையில் உள்ள நபர் ஒருவர் கேரள மாநிலம் செங்கனூர் பகுதிக்கு கொடுத்து விடுவதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

எல்லையில் பிடிபட்ட பணம் தங்கம் வாங்குவதற்கு கொண்டு செல்லப்பட்ட பணமா ? இல்லை ஹவாலா பணமா இல்லை வேறு ஏதேனும் சமூக விரோத செயலுக்காக இந்த பணம்  கொண்டு செல்லபட்டதா என்பது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.