கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது பொறியாளர் அலுவலகம். இங்கு இளநிலை பொறியாளராக சாம் செல்வராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிள்ளியூர், உண்ணாமலைக்கடை, நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டு வரும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பில் எழுத லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் மாறுவேடத்தில் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சாம் செல்வராஜ் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்குவதை கண்டு கையும் களவுமாக பிடித்துள்ளார்.


தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் இளநிலை பொறியாளரை பிடித்து விசாரணை நடத்தி அவரை சோதனை செய்த போது அவரது பேன்ட் பாக்கெட், மணிபர்ஸ் ஆகிய இடங்களில் கட்டு கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரது காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் ஒரு பையிலும், பின்பக்க  டிக்கியில் கோப்புகளுக்கு இடையேயும் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பணங்கள் எதுவும் கணக்கில் வராதது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பறிமுதல் செய்த பணம் முழுவதையும் எண்ணி பார்த்தபோது சுமார் 5 லட்சத்து 34 ஆயிரம் ருபாய் இருந்தது தெரியவந்தது.




இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்து லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜ் அவரது உதவியாளர் ஹரிஹரன் என்பவரையும் கைது செய்தனர். மேலும் ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுக்க வந்த ஒப்பந்ததாரர்கள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த லஞ்ச பணத்தில் அரசு உயர் அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஒப்பந்ததார்களுக்கு பில் எழுத லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.