'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' என்ற பாரதியின் வரியை கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்திற்காக போராடியவர்களை சுதந்திர தின நாளில் மட்டுமே நினைவு கொள்கிறோம். நாடு முழுவதும் நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முக்கிய பங்கு வகித்தது.




ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஊமத்துரை, தொன் கபிரியேல் தக்ரூஸ் வாஸ்கோமஸ், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி, வாஞ்சிநாதன், பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் என சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றோர் ஏராளம். 




வரலாற்றில் அறியப்படாத நிலையில், அனைத்து தரப்பு மக்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து உள்ளனர். இந்த பங்களிப்புகள் வரலாற்றில் பதிவாகாமலேயே உள்ளது. முன்பு தவறு செய்தவர்களுக்கு மொட்டையடிப்பது, பாதியளவு முகச்சவரம் செய்வது போன்ற தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். இதனை விடுதலை போராட்டத்தில் செயல்படுத்தி காட்டியவர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள். சுதேசி போராட்டம், உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் மருத்துவ சமுதாய மக்களின் உணர்வுப்பூர்வமான, தைரியமான பங்களிப்பை அறியும் போது, ஒவ்வொருவருக்கும் மயிர்கூச்செரிய வைக்கிறது. மருத்துவ குலத்தை சேர்ந்த நாடக மேதை விஸ்வநாததாஸ், கொக்கு பறக்குதடி பாப்பா-நீயும் கோபமின்றி கூப்பிடடி பாப்பா கொக்கென்றால் கொக்கு நம்மை கொல்ல வந்த கொக்கு என சுதந்திர தாகத்தை குழந்தைகளுக்கும் கொண்டு சென்றார்.




வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து தூத்துக்குடியில் இயங்கி வந்த கோரல் மில் என்ற நூற்பாலையில் 1908-ம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து நாள்தோறும் பொதுக்கூட்டம் நடத்தி சுதந்திர தீயை மக்களிடம் கொண்டு சென்றனர். சுதேசி இயக்கத்தை பரப்பினர். இதனால் மெல்ல மெல்ல வளர்ந்த சுதந்திர தீ காரணமாக ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் இணைந்தனர். இந்த எழுச்சியால் கடும் சினம் கொண்ட அப்போதைய உதவி ஆட்சியர் ஆஷ், போராட்டத்தை ஒடுக்க நினைத்தார். இதற்காக அரசு ஆதரவாளர்களின் கூட்டம் ஒன்றை கூட்டினார். அந்த கூட்டத்தில் மக்களிடம் உருவான எழுச்சியை ஒடுக்குவதற்கு வெளியூரில் இருந்து போலீசாரை அழைக்க வேண்டும் என்ற கருத்தை உதவி ஆட்சியர் ஆஷ் முன்வைத்தார். அவரது கருத்தை அரசு உதவி வக்கீல் ரெங்கசாமி என்பவர் ஆதரித்து பேசினார். இந்த செய்தி தூத்துக்குடி நகர மக்களிடையே பரவியது.




அதன்பிறகு வழக்கம் போல் முகச்சவரம் செய்து கொள்வதற்காக அரசு உதவி வக்கீல் ரெங்கசாமி முடிதிருத்துபவரை வீட்டுக்கு வரவழைத்தார். அவரும் வந்து முகச்சவரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது, முடிதிருத்துபவர் உதவி ஆட்சியர் ஆஷின் கருத்தை நீங்கள் ஆதரித்தது உண்மை தானா என்று கேள்வியெழுப்பினார். அதற்கு சற்று ஆவேசமாக இது உன் வேலையல்ல என்று அரசு வக்கீல் பதில் அளித்தார். உடனடியாக முடிதிருத்துபவர், இதுவும் என்னுடைய வேலை அல்ல என்று கூறி முகச்சவரம் முழுமை பெறாத நிலையிலேயே வெளியேறிவிட்டார். முற்று பெறாத முகச்சவரத்தை முழுமையாக செய்து முடிக்க யாரும் முன்வரவில்லை. அதனை தொடர்ந்து, ரெங்கசாமியின் துணிகளை சலவை செய்து வந்தவர், அந்த பணியை செய்ய மறுத்து விட்டார். இந்த எதிர்ப்பு உறுதியாக இருந்ததால், ரெங்கசாமி தூத்துக்குடி நகரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் காவலர்கள் புடைசூழ தனது சொந்த ஊரான திருவரங்கத்துக்கு புறப்பட்டு சென்றார்.




1930-ம் ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் போது உப்பு அறப்போருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தோருக்கு தொழில் செய்வது இல்லை என்று அந்த பகுதி மருத்துவ சமுதாயத்தினர் முடிவு செய்தனர். இந்த நிலையில் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சீருடை அணியாத போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டு இருந்தனர்.




இதில் ஒரு காவலருக்கு முகச்சவரம் செய்வதற்காக முடிதிருத்தும் தொழிலாளியான வைரப்பன் வந்தார். அவர் முகச்சவரம் செய்து கொண்டு இருந்தபோதே, தான் சவரம் செய்வது ஒரு போலீஸ்காரருக்கு என்பது தெரியவந்தது. இதனால் அவர் முகச்சவரம் செய்வதை பாதியிலேயே நிறுத்தி விட்டு எழுந்து சென்று விட்டார். அவரை மீண்டும் சவரம் செய்ய வலியுறுத்தி மிரட்டியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் போராட்டத்தை ஒடுக்க அங்கு முகாமிட்டு இருந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர், வைரப்பனை அழைத்து அச்சுறுத்தியும் பயனில்லை. இதனால் வைரப்பனுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையை மாவட்ட ஆட்சியர் விதித்தார். வைரப்பன் எதற்கும் அஞ்சாமல் தண்டனையை ஏற்று சிறை சென்றார்.




பாதியிலேயே முகச்சவரத்தை நிறுத்துவதில் எதிர்ப்பு மட்டும் வெளிப்படவில்லை. தண்டனையும் அடங்கி இருந்தது. பாதி முகச்சவரம் என்பது ஒருவரை இழிவுபடுத்தும் தண்டனை முறைகளில் ஒன்றாக இருந்தது. இந்த செயல்களால் ஆங்கிலேய அதிகாரத்துக்கு கட்டுப்படாமல் பழமையான தண்டனையையும் வழங்கினர். விடுதலை போராட்டத்தில் பழமையான தண்டனையை வழங்கிய வீரர்களுக்கு வரலாறு உரிய இடம் வழங்காமல் மறந்து போனது வேதனை விசயம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண