தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் உயர் மருத்துவ சிகிச்சைக்கான பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.




பின்னர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 6 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ள 6 துணை சுகாதார நிலையங்கள், 2 வெளிநோயாளிகள் பிரிவு, ஒரு செவிலியர் குடியிருப்பு கட்டிடம், ஒரு சுகாதார ஆய்வகம், ஒரு கண் அறுவை சிகிச்சை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து, நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.




அப்போது, ’’தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 253.29 கோடி செலவில் சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்பட பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மைய பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 22 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு 10 மையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு உள்ளன. ரூ.4.25 கோடி செலவில் 12 மையங்களுக்கான கட்டிட பணிகள் நடந்து வருகின்றன. தேசிய தர உறுதி நிர்ணய திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு இதுவரை 478 விருதுகள் கிடைத்து உள்ளன. இதில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 239 விருதுகள் கிடைத்து உள்ளது. மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு இதுவரை 77 விருதுகள் கிடைத்து உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 43 விருதுகள் கிடைத்து உள்ளது.




தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக மருத்துவ கட்டிடப்பணிகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று சமூக நலன்மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பேசினார்.




நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கூறும் போது, முதல்-அமைச்சர் மருத்துவமும், கல்வியும் தனது இரண்டு கண்கள் என்று கூறி அத்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதியோர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.


கலைஞர் காப்பீடு திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைவாக உள்ளனர். விரைவில் அனைவருக்கும் காப்பீடு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர் கல்லூரி கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.




முதலில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சு. , செவிலிய்ர் கல்லூரி குறித்து எதுவும் பேசாதது குறிப்பிடத்தக்கது.