தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள 81 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழித்துள்ளனர். இதுவரை மொத்தம் 6234 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.




தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு, அம்பேத்கர் நகர், அனவரத நல்லூர் ஆகிய பகுதிகளில் 33 மின்கம்பங்கள், நீர்தேக்க தொட்டி 1, தெருக்குழாய் 1, பொதுசுவர் 2, நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 2 என 39 இடங்களிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பவிளை, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்ட கந்தன்குடியிருப்பு, மூலக்கரை, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமச்சந்திரபுரம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் 40 மின்கம்பங்களிலும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவெங்கடேசபுரம், கோமனேரி ஆகிய பகுதிகளில் 2 மின்கம்பங்கள் உட்பட இன்று ஒரே நாளில் 81 இடங்களில் ஊர்த் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்தப் பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6234 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.




தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை 3618 "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,14,260 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் SOS செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடக்கும் சைபர் குற்றங்கள் குறித்தும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், சாலை விதிகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.