பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள நரி குளம் பாலத்தின் கல்வெட்டில் அமைக்கப்பட்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் முகம் காங்கிரஸ் கட்சியினரால் சிதைக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை மறைப்பதற்காக யாத்திரை செல்கிறார்கள். நேரு குடும்ப ஒற்றுமைக்காக நடத்தப்படும் யாத்திரை தான் இது. தேசிய ஒற்றுமைக்காக நடத்தப்படும் யாத்திரை இது அல்ல. நான் பெரியார் மண்ணை விட்டு போகிறேன் என ராகுல் கூறுகிறார். நீங்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரா அல்லது தேசியவாதி ஆ ? ஏன் வஉசி , கட்டபொம்மன் பெயரை சொல்லவில்லை. குமரியில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்கிய போது கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி நரி குளம் பாலம் அருகே அமைக்கப்பட்டு இருந்த கல்வெட்டில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் முகம் சிதைக்கப்பட்டு உள்ளது.

 



 

 இது தொடர்பாக பாஜக சார்பில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அழகிரி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் குமரி மாவட்ட பாஜக போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்.