தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் விருதுநகர் மாவட்டம் நள்ளியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்பாக்கத்தினை சேர்ந்த ஆண்டனி, கீழக்கரையை சேர்ந்த குமார், கமுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி, கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தினை சேர்ந்த வெள்ளைப்பாண்டி, தருவைக்குளத்தினை சேர்ந்த வாசிங்டன் ஆகிய 5 பேரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராணி தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். இதில் வாஷிங்டன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
வங்கியில் 98 லட்ச ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மண்டபத்தில் வங்கி கிளையில் பணியாற்றும்போது அந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்டனி, குமார், வெள்ளைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து கடந்த மே மாதம் வங்கியில் கொள்ளையடிப்பது குறித்து வாஷிங்டன் ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில் வெள்ளைச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி இருந்த காரணத்தினால் கோவில்பட்டி ஸ்டேட் பங்க் ஆப் இந்தியாவில் கொள்ளையடிக்கலாம் என்று கூறியுள்ளார். அதே போன்று கோவில்பட்டி அருகே விருதுநகர் மாவட்ட எல்லையில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பாதுகாப்பு குறைப்பாடு குறித்து தெரிந்துகொண்ட வாஷிங்டன் அங்கேயும் சேர்த்து கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு உள்ளுர் நபர் தேவை என்பதால் வெள்ளைச்சாமியின் நண்பரான கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தினை சேர்ந்த வெள்ளைப்பாண்டியை தேர்ந்தெடுத்து, அவருக்கு ரூ 1 லட்சம் பணம் அட்வான்சும் கொடுத்துள்ளனர்.