தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையில் சிக்கி 4 படகுகள் கவிழ்ந்தன. அவற்றில் இருந்த 12 மீனவர்கள் உயிர் தப்பினர்.

 

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த துறைமுகத்தில் முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடந்து வருகின்றன. எனவே, துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்போது குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. கட்டுமரம் மற்றும் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

 



 

இந்த நிலையில் நேற்று தூத்தூர், நீரோடியை சேர்ந்த 2 படகுகள் மற்றும் இனயத்தை சேர்ந்த 2 படகுகள் என மொத்தம் 4 படகுகளில் சின்னத்துறையை சேர்ந்த அந்தப்பன், ஜஸ்டின், இனயத்தை சேர்ந்த சகாயம், தாசன் உள்பட 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஒவ்வொரு படகிலும் தலா 3 பேர் வீதம் இருந்தனர். அவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். துறைமுக நுழைவு வாயிலில் வந்த போது ராட்சத அலையில் சிக்கி 4 படகுகளும் அடுத்தடுத்து கவிழ்ந்தன. அவற்றில் இருந்த 12 மீனவர்களும் கடலில் விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால், படகுகளில் இருந்த மீன், வலை உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கடலில் மூழ்கின. மேலும், படகுகள் மிகுந்த சேதமடைந்தன. இதனால், மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 



 

ஏற்கனவே இந்த துறைமுக கட்டுமானம் போதிய நிபுணத்துவம் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துறைமுக வாயிலை மறு சீரமைப்பு செய்ய பல முறை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ஏற்படும் விபத்தை தடுக்க துறைமுக வாயிலை ஆழப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.