ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கர தீ விபத்து-ஹோட்டல் பைக் எரிந்து நாசம்.




கடந்த மூன்று மாதங்களாக கருங்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருகிறது. இதில் கருகிய நிலையில் உள்ள வாழை மரத்தில் தீடீரென்று தீப்பற்றி எரிவதும், அதை தீயணைப்பு படையினர் அணைப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இதற்கிடையில் வருகிற 5 ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தரவுள்ளார். இதற்காக பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேடை அமைக்கும் பணிக்காக மிகப்பெரிய ஷெட் அமைத்து வருகிறார்கள். 




இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பகுதியில் தீ பிடித்துள்ளது. இந்த தீ காற்றில் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது. அதன்பின் பனை மரத்தில் தீ பற்றியது. காற்று சூழன்று அடித்த காரணத்தினால் தீ வேகமாக பரவியது. இதனால் சுமார் 300க்கு மேற்பட்ட பனை மற்றும் தென்னை மரங்கள் பற்றி எரிந்தது. அதோடு மட்டுமல்லாமல் வாழை தோட்டத்திலும் தீ பரவ ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீ அணைக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் இயலவில்லை. காட்டு தீ அங்கிருந்து பரவி ஆதிச்சநல்லூரில் மேடை அமைக்கும் இடம் வரை வந்தது. அந்த இடத்துக்கு வர விடாமல் தீயணைப்பு படையினர் போராடினர்.




இதற்கிடையில் திருச்செந்தூரில் இருந்தும் , பாளையங்கோட்டையில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வந்து மூன்று வாகனத்தில் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான உணவு ஹோட்டல், அங்கிருந்த பைக் மற்றும் டோசர் இயந்திரங்களை எரித்தது. அங்கு திரண்டு வந்த மக்களும், ஸ்ரீவைகுண்டம் ,செய்துங்கநல்லூர் போலீசாரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையில் அந்த வழியாக வந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கருங்குளத்தில் இருந்து பேருந்து கொங்கராயகுறிச்சி ஸ்ரீவைகுண்டம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. நெருப்பு சுவாலை திருச்செந்தூர் ரோட்டை மறித்து நின்றது. மேலும் மின்சாரம் தடை ஏற்பட்டதால் அந்த பகுதியே இருண்டு விட்டது.தொடர்ந்து 3 மணி நேரமாக தீயணைக்கும் படையினர் போராடினர். காற்று குறையாமல் சுழற்றி அடிப்பதால் தீயை அணைப்பது சவலாக இருந்தது. எரிந்த பைக் தொல்லியல் துறை ஊழியர் ஒருவரின் பைக் என்பது ஆகும்.




சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்பட போலீசார் வந்து பார்வையிட்டு , மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். நான்கு தீயணைப்பு படை வண்டி முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியாத காரணத்தினால் போலிசார், திருச்செந்தூர் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரர்களின் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்தனர்.




பொதுமக்கள் மற்றும் சாலை ஊழியர்கள் மூலமாக தீயை அணைக்க போராடி ஒரு வழியாக விழா மேடை அருகில் தீயை பரவவிடாமல் அணைத்து முடித்தனர்.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தர மூன்று நான்கு நாட்களே உள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.