ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீரானது வீணாக கடலில் கலக்கிறது. இதனை சேமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி கடலில் உபரியாக கலக்கும் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி வெள்ள நீரில் கன்னடியன் அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு நம்பியாறு மற்றும் தாமிரபரணி நதிகளுடன் இணைக்க வெள்ள நீர் கால்வாய் ஏற்படுத்தி  தாமிரபரணி கருமேணிநாறு நம்பியார் நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 369 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 872 கோடி மதிப்பீட்டில் திட்டம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 32 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களும் என  மொத்தமாக 50 கிராமங்கள் பயன் பெறும்.


 





இந்த நிலையில் நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நெல்லை கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் வெள்ளநீர் கால்வாய் பணிக்காக பாலம் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வாறு மழை பெய்து வெள்ளநீர் ஏற்பட்டால் 1300 கன அடி தண்ணீர் தற்காலிகமாக சோதனை ஓட்டமாக இந்த வெள்ள நீர் கால்வாயில் செல்வதற்கான பணிகள் முடுக்கி  விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாபநாசம் அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீர் சோதனை ஓட்டமாக வெள்ள நீர் கால்வாய் பணிகளுக்காக திறந்து விடப்பட இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தான் இந்த பணிகளை முன்னெடுப்பதாகவும் கூறி கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான  அப்பாவு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பணிகளை ஆய்வு செய்து இந்த பருவ மழையில் வெள்ள நீர் வந்தால் அதனை 1300 கன அடி தண்ணீர் இந்த வெள்ள நீர் கால்வாயில் சோதனை ஓட்டமாக செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதற்கு கன்னடியான் கால்வாய் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் விவசாயிகள் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலக வாயிலில் திரண்ட போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்தனர். இதையடுத்து கடும் வாக்குவாதத்துக்கு பிறகு சுமார் பத்து விவசாயிகள் மட்டும் உள்ளே சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.




இதுகுறித்து கன்னடியான் கால்வாய் பாசன விவசாய சங்க செயலாளர் கண்ணப்ப நயினார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாபநாசம் அணைக்கட்டில் தற்போது 82 அடி தான் தண்ணீர் இருக்கிறது. இந்த நிலையில் 75 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீரை சோதனைக்காக எடுக்கும்போது அணைக்கட்டில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் சென்று விடும். மேலும் பிசான சாகுபடிக்காக காத்திருக்கும் கன்னடியான், கோடை மேலழகியான், நதியுண்ணி மற்றும் தாமிரபரணி ஆற்று படுக்கையில் உள்ள மற்ற பிற கால்வாய் பாசன பகுதி விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகும். எனவே சோதனை ஓட்டத்திற்காக ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்க விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.