அம்பலவாண சுவாமி கோவில் குடமுழுக்கு:


நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்தரும்  நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலோடு இணைந்தது மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயில். இந்த கோவில் 8ம் நுற்றாண்டை சோ்ந்தது. இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடப்பட்டு  கடந்த வருடம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 117 ஆண்டுகள் கழித்து இன்று  அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.  இதற்கான பூர்வாங்க பூஜைகள்  கடந்த 6ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன்  ஆரம்பிக்கப்பட்டு யாகசால பூஜைகள் நடந்து வந்தது.  கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை   யாகசாலையில் இருந்து  புனித கலச நீர் அடங்கிய கலசங்கள்  மேளதாளங்களுடன் எடுத்துவரப்பட்டு சுவாமி விமான கோபுரம் மூலஸ்தானம்  மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக  குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கிவைத்து தரிசனம் செய்தார்.


இந்த ஆண்டு இறுதிக்குள் 250 கோவிலில் குடமுழுக்கு செய்ய திட்டம்:


குடமுழுக்கை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு  மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் அமைந்துள்ள அம்பலமான சுவாமி கோவிலில் 117 ஆண்டுகளுக்கு பின்பு குடமுழுக்கு  நடந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற முதல் 2021-22 ஆண்டில் 1000 ஆண்டுகள்  தொன்மையான கோயில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோயில்களில் குடமுழுக்கு நடத்த 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 2021-22, 2023-2024, 2024-2025 என மூன்று ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 திருக்கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று வரை நெல்லை மானூர் அம்பலவாணசுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோவில்கள் குடமுழுக்கு நடந்துள்ளது. இன்று மட்டும் 55 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 250 திருக்கோவில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் திருத்தேர் பராமரிப்பு, தேர் கூடம் அமைத்தல், தெப்பக்குளம் பராமரித்தல் என நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது. மானுர் அம்பலவான சுவாமி கோவிலுக்கு செந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்கு விடப்பட்டு அந்த தொகை கோவிலின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திமுக ஆட்சியின் திட்டங்கள், சாதனை பட்டியல்:


நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 திருக்கோவிலுக்கும், நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 திருக்கோவில்களுக்கும் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 805 திருக்கோவிலுக்கு சொந்தமான 6703 கோடி ரூபாய் மதிப்புள்ள  சுமார் 6,853 ஏக்கர் நிலம் திமுக ஆட்சியில் தான் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் திருக்கோவிலின் பெயர்கள் இடம் பெறும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் 92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது. 59 கோடி ரூபாய் செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. 11 கோடி 93 லட்சம் செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.


28 கோடியே 44 லட்சம்  செலவில் 172 கோவில்களில்  மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. 29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம்  வாணி அம்மன் திருக்கோவில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். ஒன்பது வெள்ளித் தேர் சுமார் 27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.120.33 கோடி செலவில் 220 திருக்குளங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது. 321 கோடி மதிப்பீட்டில் 85 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதியில் கட்டப்பட்டு வருகிறது.. 136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள் 500 வீடுகள் அர்ச்சகர்கள் திருக்கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டு வருகிறது. 1530 கோடி ரூபாய் செலவில் 19 திருக்கோவில்களில் பெருந்திட்டவரை மேற்கொள்ளப்பட்டு திருச்செந்தூர், பழனி உட்பட பணிகள் நடந்து வருகிறது.  தொடர்ந்து இவ்வாறு திட்டங்களை சாதனைகளை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம், திராவிட மாடல் திமுக ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி என தெரிவித்தார்.